சரித்திரத்துக்கு விடை! 75 ஆண்டுகால நினைவுகள் பகிர்வு- நாடாளுமன்ற பழைய கட்டிட கடைசி நாள் நிகழ்வு!
டெல்லி: இந்திய சரித்திரத்தின் கம்பீர அடையாளமாக திகழுகிற பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்றுதான் கடைசியாக நிகழ்வுகள் நடைபெற உள்ளன. நாளை முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அனைத்து நிகழ்வுகளும் வழக்கம் போல நடைபெறும்.
இந்திய நாடாளுமன்றத்தின் தற்போதைய (பழைய) கட்டிடமானது 1921-ம் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தில் 1927-ம் ஆண்டு ஜனவரி 19-ந் தேதி முதல் கூட்டம் நடைபெற்றது. தற்போதைய நாடாளுமன்ற கட்டிடமானது 100 ஆண்டுகளைத் தாண்டி கம்பீரமாக நிற்கிறது.

நாடு விடுதலைக்குப் பின்னர் 1952-ம் ஆண்டு மே 13-ல் நாடாளுமன்றத்தின் இரு சபைகளின் முதல் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் நாடாளுமன்றத்துக்கான இணைப்புக் கட்டிடம் 1970-ல் கட்டப்பட்டு 1975-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரால் திறந்துவைக்கப்பட்டது.
இந்த நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்றுதான் கடைசியாக இரு சபை நிகழ்வுகளும் நடைபெற உள்ளது. நாளை முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இரு சபை நிகழ்வுகளும் நடைபெறும். புதிய நாடாளுமன்றமானது 2020-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு கடந்த மே 28-ந் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
இன்றைய நாடாளுமன்ற நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்த மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால நினைவுகள் மட்டுமே இன்று பகிர்ந்து கொள்ளப்படும். பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் கடைசி நிகழ்வு இது. இது ஒரு சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த நாள். நாடாளுமன்ற பழைய கட்டிடத்தில் நடைபெறும் கடைசி விவாதம் இதுவே என்றார்.
முன்னதாக முற்பகல் 11 மணிக்கு பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். பழைய நாடாளுமன்றத்தில் கடைசி கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் என்ற சரித்திரத்தையும் பெறுகிறார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications