காங். ஜி 23 கூட்டத்திற்கே மறுநாளே.. அதிருப்தி தலைவருடன் ராகுல் காந்தி சந்திப்பு.. நடந்தது என்ன?
டெல்லி: காங்கிரஸ் அதிருப்திக் குழுவான ஜி-23 தலைவர்களுடனான நேற்றைய சந்திப்புக்கு பிறகு இன்று அந்த குழுவை சேர்ந்த அரியானா முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை சந்தித்து உள்ளார்.
5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பின் காங்கிரஸ் மூத்த தலைவரும் ஜி-23 குழுவில் உள்ளவருமான குலாம் நபி ஆசாத் வீட்டில் அதிருதி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், கபில் சிபல், மணிஷ் திவாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் படுதோல்விகள் குறித்தும், எதிர்காலத்தில் தோல்விகளை தவிர்ப்பது பற்றியும் தலைவர்கள் பேசினர். அத்துடன் தலைமையுடன் பேசி இணக்கமான முடிவுக்கு வரவும் சம்மதம் தெரிவித்தனர்.

காங்கிரஸ் செயற்குழுக்கூட்டம்
இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் 5 மாநில தேர்தல் படுதோல்விக்கு பிறகு அடுத்தக்கட்ட திட்டங்கள், தேர்தல் தோல்விகள் மற்றும் நிலையான தலைமை குறித்து ஆலோசிக்க கடந்த 13 ஆம் தேதி அக்கட்சியின் செயற்குழு கூட்டம் கூடியது. இதில் பேசிய ஜி-23 தலைவர்கள் குலாம் நபி ஆசாத் மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோர், தங்களுக்கு சோனியா காந்தி மீது நம்பிக்கை உள்ளது." என்றனர்.

18 அதிருப்தி தலைவர்கள் கூட்டம்
இதனிடையே நேற்று ஜி-23 குழுவில் உள்ள அதிருப்தி தலைவர்கள் மற்றும் புதியவர்களான அரியானா முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் ஹூடா, மணிஷங்கர் அய்யர், ராஜ் பாபர், ஷங்கர் சிங் வகேலா உட்பட 18 பேர் நேற்று மீண்டும் குலாம் நபி ஆசாத் இல்லத்தில் சந்தித்து அடுத்தக்கட்ட திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினர். அதில் காந்தி குடும்பத்துக்கு எதிராகவோ, உட்கட்சித் தேர்தல் தொடர்பாகவே எதுவும் பேசப்படவில்லை என்றும், 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒன்றுசேர்த்து கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று சோனியா காந்தியுடன் சந்திப்பு?
இந்த கூட்டத்துக்கு பிறகு சோனியா காந்தியை தொடர்புகொண்ட குலாம் நபி ஆசாத், கட்சி வலுப்படுத்த தொடர்ந்து ஆதரவு அளிக்கப்போவதாக தெரிவித்தார். இதனிடையே இன்று காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியையும், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியையும் அதிருப்திக் குழுவான ஜி-23 தலைவர்கள் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ராகுலை சந்தித்த பூபிந்தர் ஹூடா
இதனிடையே நேற்று ஜி-23 அதிருப்தி தலைவர்கள் கூட்டத்தில் முதல்முறையாக கலந்துகொண்ட அரியானா முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் ஹூடா, இன்று காலை ராகுல் காந்தியை சந்தித்து பேசி இருக்கிறார். இந்த சந்திப்பின்போது அரியானா மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக அவர் ராகுல் காந்திக்கு ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. தனக்கோ அல்லது தனது மகன் தீபிந்தர் ஹூடாவுக்கோ மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை வழங்குமாறும் ராகுல் காந்தியிடம் அவர் கேட்டுக்கொண்டதாவும் தகவல் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications