பாட்னா எதிர்க்கட்சிகள் ஆலோசனை - பாஜகவின் அமித்ஷா முதல் பட்னாவிஸ் வரை தினு தினுசா சவுண்டுகள்
டெல்லி: பீகார் தலைநகர் பாட்னாவில் காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதை பாஜக தலைவர்கள் மிக கடுமையாக விமர்சித்துள்ளனர். பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டதற்கு எதிராக கடுமையான விமர்சனங்களுடன் பாஜகவினர் போஸ்டர்களை ஒட்டி இருக்கின்றனர்.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், சரத் பவார், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மே.வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா என 16 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.

பாட்னா ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்களை வரவேற்று பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த போஸ்டர்களுக்கு எதிராக வாரிசு அரசியல், குண்டர்கள் அரசியல், ஜனநாயகப் படுகொலையாளர்கள் என விமர்சித்து பாஜகவினரும் போஸ்டர்களை ஒட்டி இருந்தனர்.
ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாட்னாவில் நடப்பது போட்டோ செசன். 2024 லோக்சபா தேர்தலில் 300-க்கும் அதிகமான இடங்களில் பாஜக வெல்லும் என்றார். ஒடிஷாவின் கலஹாண்டியில் பேசிய பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி அம்மையார்தான் நிதிஷ்குமாரையும் லாலு பிரசாத் யாதவையும் சிறையில் அடைத்தவர். இன்றைக்கு இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கூட்டணி அமைக்கிறார்களாம் என சாடி இருந்தார்.

மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், சிவசேனா கட்சியை இன்னொரு காங்கிரஸாக உருவாக்க கூடாது என்பதுதான் பால்தாக்கரேவின் கோட்பாடு. காங்கிரசுடன் கை கோர்க்கும் நிலை வந்தால் சிவசேனாவையே கலைப்பேன் என்றவர் பால் தாக்கரே. ஆனால் இன்று பாட்னா கூட்டத்தில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டுள்ளது வினோதமானது என்றார்.












Click it and Unblock the Notifications