அருணாச்சல பிரதேசத்தில் ஒட்டுமொத்த கிராமத்தையே புதிதாக கட்டிய சீனா.. பென்டகன் வெளியிட்ட ஷாக் தகவல்
டெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் இந்தியச் சீனா எல்லையில் சர்ச்சைக்குரிய இடத்தில் சீனா மிகப் பெரிய ஒரு கிராமத்தையே கட்டியுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் பென்டகன் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
Recommended Video
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே எல்லையில் நிலைமை சொல்லிக்கொள்ளும் நிலையில் இல்லை. குறிப்பாகக் கடந்த ஆண்டு ஏற்பட்ட கல்வான் மோதலுக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமானது.
காஷ்மீர் மட்டுமின்றி அருணாச்சல பிரதேசத்திலும் இரு தரப்பு ராணுவமும் தங்கள் வீரர்களையும் தளவாடங்களையும் குவித்து வருகிறது. குறிப்பாக, அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா அதிகளவில் உள்கட்டமைப்பில் முதலீடு செய்து வருகிறது.

மிகப் பெரிய கிராமம்
இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய இடத்தில் சீனா மிகப் பெரிய ஒரு கிராமத்தையே கட்டியுள்ளதாக பென்டகன் அறிக்கை அளிதுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பென்டகன் ஆண்டுதோறும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும். அப்படி இந்த ஆண்டு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லை பிரச்சினையை தீர்ப்பதில் மிகச் சிறிய அளவிலேயே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் கடந்த 2020இல் தொடங்கி சீனா தொடர்ந்து அத்துமீறி வருவதே இதற்கு முக்கிய காரணம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எல்லையில் கிராமம்
இது தொடர்பாக பென்டகன் தனது அறிக்கையில், "கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பல இடங்களில் சீனா ராணுவம் அத்துமீறி நுழைந்துள்ளது. மோதல் நிலவும் பல பகுதிகளில் தங்கள் ராணுவத்தை அதிகளவில் குவித்துள்ளது. திபெத் மற்றும் சின்ஜியாங் பகுதியில் இருந்த ரிசர்வ் படைகளும் கூட எல்லைப் பகுதிகளுக்கு அவசர அவசரமாக அனுப்பப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும் எல்லைப் பகுதிகளில் தங்கள் உரிமைகோரலை நிலைநாட்ட இது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

எங்கே?
பிரச்சினைக்குரிய இடமாகக் கருதப்படும் சாரி ஆற்றின் கரையில் கடந்த ஆண்டு சீனா 100 குடும்பங்கள் வாழக்கூடிய கிராமம் ஒன்றைக் கட்டமைத்தது. இந்த பகுதி சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட திபத் மற்றும் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு செக்டார் ஆகிய பகுதிகளுக்கு நடுவில் வருகிறது. எல்லையில் சர்ச்சைக்குரிய இடத்தில் நடைபெறும் சீனாவின் இந்த கட்டுமானம் இந்திய அரசுக்குக் கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராணுவ பயன்பாடு
எல்லையில் வாழும் மக்களுக்காகவே சீனா இந்த கிராமத்தை உருவாக்கியுள்ளது எனக் கூறப்பட்டாலும் கூட தேவைப்படும் நேரத்தில் சீன ராணுவமும் இந்த கிராமத்தைப் பயன்படுத்தும் வகையிலேயே இக்கிராமம் கட்டப்பட்டுள்ளதாக இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. கடந்த ஆண்டில் இருந்தே அருணாச்சல பிரதேச எல்லையில் சீனாவின் கட்டுமானம் அதிகரித்துள்ளது. சாரி ஆற்றின் கரையில் சாலை மற்றும் தங்கும் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தகவல் தொடர்பு வசதிகளும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

என்ன காரணம்
மேலும் பென்டகன் தனது அறிக்கையில், "மிகப் பெரிய இராணுவ மோதல் ஏற்படாக் கூடாது என்றும் இரு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்பு உடன் பணியாற்ற வேண்டும் என்று கருத்திற்குச் சீனா திரும்பி வருகிறது. இந்தியா அமெரிக்கா உறவு நெருக்கமாகக் கூடாது என்பதற்காகவே சீனா இதுபோன்ற ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இருப்பினும், சீனாவின் நோக்கமும் நிறைவேறவில்லை" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications