தேர்தல் பத்திரம்.. கூடுதல் கால அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கி! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் எஸ்பிஐ தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. விசாரணையில் எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திர நடைமுறை, வெளிப்படையானதாக இல்லை என்று கூறி சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. மட்டுமல்லாது அரசியல் கட்சிகள் வாங்கிய தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கும்படி எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் வழங்கிய காலக்கெடு முடிந்த பின்னரும் எஸ்பிஐ வங்கி, உரிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை.

அதாவது இந்த விவரங்களை வெளியிட எஸ்பிஐ, ஜூன் 30ம் தேதி வரை (லோக்சபா தேர்தல் முடிந்த பின்னர்) கால அவகாசம் கேட்டிருந்தது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
எஸ்பிஐ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடக்க வேண்டும் என்று ஏடிஆர் அமைப்பு மற்றும் சிபிஎம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ஷதன் ஃபாராசத் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். எதிர் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
காலை 10.30 மணிக்கு வழக்கு விசாரணை தொடங்கிய நிலையில், எஸ்பிஐக்கு நீதிபதிகள் சரமாரியான கேள்வியை எழுப்பினர். "நாங்கள் உத்தரவு பிறப்பித்து 26 நாட்கள் ஆகிவிட்டது. நீங்கள் என்ன செய்துக்கொண்டிருந்தீர்கள்? என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?" என்று கேள்வி எழுப்பினர். மேலும், நாளை மாலைக்குள் அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
தேர்தல் பத்திரம் விளக்கம்: அரசியல் கட்சிகளுக்கு தனிநபர் அல்லது நிறுவனங்கள் ரொக்கமாகவோ, காசோலையாகவோ நன்கொடை கொடுப்பதற்கு பதிலாக, தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2017-18ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவித்தது.
இதனையடுத்து இது 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் எஸ்பிஐ வங்கி ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்களை வெளியிட்டது.
நீதிமன்ற தடை: 'தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுக்கும்' என்று கூறி தேர்தல் பத்திரங்களுக்கு பிப்ரவரி மாதம் 15ம் தேதி அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். மட்டுமல்லாது, இது தொடர்பான விவரங்களையும் வெளியிட மார்ச் 6ஆம் தேதி வரை அவகாசம் அளித்து ஸ்டேட் வங்கிக்கு உத்தரவு பிறப்பித்தது. அதற்குள் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை மார்ச் 13ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications