கச்சத்தீவை மீட்கக் கோரி மனு.. நிலுவை வழக்குடன் சேர்த்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
டெல்லி: கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி மேலும் ஒரு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள மனுக்களோடு சேர்த்து இந்த மனுவையும் விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கச்சத்தீவானது ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமாக இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சமஸ்தான முறை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
சமஸ்தானத்திற்கு சொந்தமான நிலப்பகுதியை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. தமிழக மீனவர்கள் தங்களது மீன் வலைகளை காய வைக்கவும், சமையல் செய்யவும் கச்சத்தீவை உபயோகித்து வந்தனர்.

இந்தியா- இலங்கை
இது போன்ற சூழலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கடந்த 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் அடிப்படையில கச்சத்தீவு இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இது சட்டவிரோதமான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட இரு நாட்டு பிரதமர்களுக்கும் அதிகாரம் இல்லை.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றத்தின் லோக்சபை மற்றும் ராஜ்யசபையில் ஒப்புதல் பெறாததால் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகாது. எனவே கச்சத்தீவை மீண்டும் இந்திய அரசிடமே ஒப்படைக்க வேண்டும். அது போல் கச்சத்தீவை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்த காலம் மாறிவிட்டது.

கச்சத்தீவு
கச்சத்தீவை இலங்கை கடற்படையினர் தங்களுடைய முழு கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே இதுவரை 1500 மீனவர்களை இலங்கை கடற்படை கொன்றுள்ளது. இலங்கையிடம் இருந்து இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி தமிழக சட்டசபையில் கடந்த 2013 ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்
இந்த தீர்மானத்தின் மீது மத்திய அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே 1974 ஆம் ஆண்டு கையெழுத்தான கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யக் கோரி மத்திய அரசுககு நீதிமன்றம் உத்தரவிட வேணடும். அது போல் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

100க்கும் மேற்பட்டோர்
இந்த மனுவை நீதிபதி ஹெமந்த் குப்தா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜெயசுகின் ஆஜராகினார். ஆண்டுதோறும் 100-க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படுவதாக தன் வாதத்தை எடுத்துரைத்தார்.

நீதிபதி அனுமதி
அப்போது நீதிபதி அமர்வு, இதே விவகாரம் குறித்து ஜெயலலிதா தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளதே அதை விசாரித்து தீர்ப்பு அளித்தால் போதாதா என கேள்வி எழுப்பினர். இதற்கு மனுதாரரின் வழக்கறிஞர் "ஜெயலலிதாவின் மனுவுடன் எனது கட்சிக்காரரின் மனுவையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என்றார். இதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.












Click it and Unblock the Notifications