5 மாநில தேர்தலை ரத்து பண்ணுங்க... மோடி பிரசாரத்துக்கும் தடை விதிங்க... உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் பொதுவானவர் என்பதால், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என தேர்தல் பணி சுறுசுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் எம்.எல். சர்மா என்பவர் இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.அவர் தனது மனுவில், தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை பதவிக் காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்த வேண்டும். பிரதமர் பொதுவானவர் என்பதால், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார். இந்த மனு மீது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு மார்ச் 9-ம் தேதி விசாரணை நடத்த உள்ளது.












Click it and Unblock the Notifications