பிரதமரை கொல்ல சதி.. ஹிட் லிஸ்ட்டில் முக்கிய தலைவர்கள்.. பிஎஃப்ஐ மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சதி திட்டம் செய்ததாக அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை நடந்த தீவிரவாத தடுப்பு சோதனை நடவடிக்கைகளில் இதுபோல மெகா சோதனை நடந்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள், தலைவர்கள், நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ மற்றும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.

13 மாநிலங்களில் சோதனை
இந்த சோதனையில் தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளித்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல், தடை செய்யப்பட்ட இயக்கங்களில் இணையும்படி மக்களைத் தூண்டுதல் போன்ற செயல்களில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள், வசிக்கும் பகுதிகளில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாக என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனையின் முடிவில், நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவில் அதிக கைது
அதில் அதிகமாக கேரளாவில் தான் கைது நடவடிக்கை நடந்துள்ளது. அங்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 22 பேர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகா, அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, டெல்லி, ராஜஸ்தான் ஆகிய இடங்களிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமரை கொல்ல சதி
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், பல பகீர் தகவல்களை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், கேரளாவில் பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த ஷாபிக் பயேத் என்பவரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், ஜூலை 12ல் பாட்னாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் கொலை செய்ய திட்டமிட்டது தெரிய வந்தது.

கலவரங்கள் செய்ய திட்டம்
மேலும் பயங்கரவாத செயல்களுக்கு ஆட்கள் சேர்த்தல், ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை சேகரித்து உத்தரப் பிரதேசத்தில் பதற்றமான இடங்களிலும், முக்கிய பிரமுகர்களின் வீடுகளிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. அதேபோல் பிஎஃப்ஐ அமைப்பு தொடர்புடைய வங்கி கணக்குகளில் வெளிநாடுகளில் இருந்து ரூ.120 கோடி பணம் வந்துள்ளதாகவும், அதில் கணிசமான தொகை டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் கலவரம் ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications