ராம்விலாஸ் பாஸ்வான் வகித்த உணவு வினியோக துறை பியூஷ் கோயலிடம் ஒப்படைப்பு
டெல்லி: மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் நேற்று காலமான நிலையில் அவர் வகித்த அமைச்சரவை பொறுப்புக்கள், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் மாளிகை இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டது.

மறைந்த, ராம் விலாஸ் பாஸ்வான் மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சராக இருந்தார். இப்போது இந்த கூடுதல் துறைகளை பியூஷ் கோயல் ஏற்றுக்கொள்வார். பியூஷ் கோயல் வசம், ரயில்வே அமைச்சகம் மற்றும் வர்த்தக-தொழில்துறை அமைச்சகங்கள் ஏற்கனவே உள்ளன.
இதனிடையே இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ராம் விலாஸ் பாஸ்வானுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நாட்டில் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி, அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
நாளை, ராம் விலாஸ் பாஸ்வானின் இறுதி சடங்குகள் பாட்னாவில் நடைபெற உள்ளது. அதில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மத்திய அரசின் சார்பில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராம்விலாஸ் பாஸ்வானுடன் சேர்த்து கடந்த 15 நாட்களில் இரண்டு மத்திய அமைச்சர்கள் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளனர். ராம் விலாஸ் பாஸ்வானுக்கு முன்பு, செப்டம்பர் 23ம் தேதி ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்தார்.
ராம் விலாஸ் பாஸ்வான் பீகாரில் மட்டுமல்ல, நாடு முழுக்கவே முக்கிய தலித் தலைவராக விளங்கியவர். 74 வயதான ராம் விலாஸ் பாஸ்வான் டெல்லி மருத்துவமனையில் நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இதய பாதிப்பால் நேற்று இரவு உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications