போலீசை சமாளிக்க புதிய யுக்தி...ராகேஷ் திகைத்தின் புதிய திட்டம்...அடுத்து என்ன
டெல்லி : போலீசாரின் தாக்குதலை சமாளிக்க விவசாயிகளின் உறவினர்களையும் களத்தில் இறக்க பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகைத் புதிய திட்டத்தை வகுத்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து 75 நாளைக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் போலீசாரின் தாக்குதலை சமாளிக்க விவசாயிகளும், விவசாயிகளின் தாக்குதலை சமாளிக்க போலீசாரும் புதுப்புது வழிகளை கண்டுபிடித்து வருகின்றனர்.
விவசாயிகளின் வாள் தாக்குதலை சமாளிக்க, போலீசார் இரும்பு தடிகள், நீண்ட வாள்களை உருவாக்கினர். விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் டெல்லியில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகளும் புதிய திட்டத்தை வகுத்து வருகின்றனர்.
ராகேஷ் திகைத், தனது தலைமை பண்பினை வெளிப்படுத்தும் விதமாக போராட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள், போலீஸ் படைகளை சமாளிக்க உறவினர்களை உதவிக்கு அழைக்கும் திட்டத்தை வகுத்துள்ளார்.
அவர் பேட்டியில் கூறுகையில், அரசு எங்களை கவனித்து வருகிறது. அடுத்த கட்ட போராட்டத்தில், போலீஸ் மற்றும் ஆயுதப்படையில் பணியாற்றும் விவசாயிகளின் குடும்பத்தினர்கள் பங்கேற்க வேண்டும். இதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் குடும்பத்தினரின் போட்டோவுடன் அமர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
விவசாயிகள் போராட்டம்... கிரேட்டா தன்பெர்க் பகிர்ந்த டூல்கிட்... உருவாக்கியது காலிஸ்தான் ஆதரவாளர்?
இதே கோரிக்கையை மற்றொரு விவசாய சங்க தலைவரான தர்மேந்திர மாலிக்கும் விடுத்துள்ளார். அனைத்து வீரர்களும் இந்த போராட்டத்திற்கு தோள் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ராகேஷ் திகைத் கூறுகையில், அரசு நன்றாக காதுகளை திறந்து கேட்க வேண்டும். 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றாலும், சட்ட உறுதி அளிக்காவிட்டால் போராட்டத்தை தொடர பல்வேறு திட்டங்கள் எங்களிடம் உள்ளது. நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும், அரசியல்சாரா போராட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.