ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழக்கு.. ஆக.2 முதல் தினசரி விசாரணை.. அரசியல் சாசன அமர்வு அதிரடி
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ஆகஸ்டு மாதம் 2-ம் தேதி முதல் தினசரி விசாரணை நடக்கும் என அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு நீக்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. எனினும் அங்கு இதுவரை சட்டமன்ற தேர்தல் நடத்தப்படவில்லை.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை 3 ஆண்டுகளுக்கு பிறகு உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம் தினசரி அடிப்படையில் வழக்கின் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.அதாவது திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. இதேபோல், இந்த வழக்கில் எழுத்து பூர்வமான வாதங்களை ஜூலை 27 ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்றும் அதன்பிறகு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications