கும்பமேளாவுக்கு போக அலை மோதிய கூட்டம்! டெல்லி ரயில் நிலையத்தில் நெரிசல்.. பலியானோருக்கு மோடி இரங்கல்
டெல்லி: புது டெல்லி ரயில் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோருக்கு பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கும்பமேளாவுக்கு செல்வதற்காக பக்தர்கள் திடீரென அதிக அளவில் கூடியதே இந்த நெரிசலுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் உயிரிழந்த நிலையில், டெல்லியிலும் நெரிசல் ஏற்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

புது டெல்லி ரயில் நிலையத்தின் 14-15வது நடைமேடைகளில் திடீரென பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். இரவு 9.50 மணியளவில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக வதந்தி பரவியது. இதனையடுத்து பிரயாக்ராஜுக்கு போக ஏற்கெனவே நின்றுக்கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்த கூட்டமும் முந்தியடித்துக்கொண்டு ஏறியது. இதில், பலரும் நெரசலில் சிக்கி மயக்கமடைந்தனர்.
சம்பவத்தையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து 4 தீயணைப்பு வாகனங்களில் மீட்பு படையினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் உடனடியாக டெல்லி ரயில் நிலையத்திற்கு விரைந்தனர். நெரிசலில் சிக்கிய பலர் மயக்கமடைந்துள்ளதாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் ரயில் நிலையத்தில் நெரிசல் சம்பவம் ஏதும் நடக்கவில்லை என்றும், அது வதந்தி எனவும், கும்பமேளா நடைபெறும் பிரக்யராஜுக்கு 2 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்றும் வடக்கு ரயில்வே அறிக்கை விட்டது.
இருப்பினும் கூட்ட நெரிசல் குறித்த வீடியோ வெளியான நிலையில், 3 குழந்தைகள் உட்பட சுமார் 15 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாக ஏஎன்ஐ செய்தி ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த துயர சம்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உறவினர்களை இழந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார். அதேநரம், காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் கூறியுள்ளார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications