தடுப்பூசி.. பாஜக மாநிலம், பாஜக அல்லாத மாநிலம்.. பாகுபாடு காட்டும் மத்திய அரசு.. காங். புகார்
டெல்லி: கொரோனா தடுப்பூசி மருந்துகளை விநியோகிப்பதில் பாஜக ஆளும் மாநிலங்கள், பாஜக ஆளாத மாநிலங்கள் என பாகுபாடு பார்த்து செயல்படுகிறது மத்திய அரசு என்று காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அனைத்து மாநிலங்களையும் சமமாக பாவிக்கும் மன நிலையில் மத்திய அரசு இல்லை. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்கள், பாஜக ஆளாத மாநிலங்கள் என பிரதமர் பிரித்துப் பார்க்கிறார்.

உதாரணத்திற்கு இதைச் சொல்கிறேன். காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானில் ஒரு நாளைக்கு 15 லட்சம் டோஸ்கள் கொடுக்கும் அளவுக்கு வசதி உள்ளது. ஆனால் இந்த மாநிலத்திற்கு ஒரு மாதத்திற்கே வெறும் 49 லட்சம் டோஸ்தான் தரப்பட்டுள்ளது. இதிலிருந்தே அவர்கள் பாரபட்சம் பார்ப்பதை உணர முடியும்.
ஒரு நாளைக்கு 10 லட்சம் டோஸ்கள் வரை கொடுத்து ராஜஸ்தான் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் மோடி அரசோ பாஜக ஆளாத மாநிலம் என்பதால் பாகுபாடு காட்டி குறைந்த அளவிலான டோஸ்களையே தருகிறது.
மோடி இப்படிப் பிரித்துப் பார்த்தால் நாம் எப்படி அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியைப் போட முடியும் என்றார் ஜெயராம் ரமேஷ்.
இதற்கிடையே பஞ்சாப் மாநிலத்தில் கோவிஷீல்ட் சப்ளை இல்லை என்றும் கோவாக்ஸின் ஒரு நாளைக்கு மட்டுமே ஸ்டாக் உள்ளதாகவும் அந்த மாநில முதல்வர் அமரீந்தர் சிங் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு உடனடியாக தடுப்பூசிகளை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications