சிபிஐ இயக்குநர் பதவி.. ரேஸில் பெண் ஐபிஎஸ் அதிகாரி முதலிடம்.. தேர்வானால் சாதனைதான்!
டெல்லி: மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குநர் பதவிக்கு பெண் உள்பட 11 ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தனா ஆகியோருக்கு இடையே அதிகாரப் போட்டி இருந்ததை தொடர்ந்து, அவர்கள் இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். அலோக் வர்மாவுக்கு பதிலாக தற்காலிகமாக நாகேஷ்வர ராவ் என்பவர் நியமிக்கப்பட்டார்.
நாகேஸ்வரராவின் நியமனத்துக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்டோர் கொண்ட தேர்வு குழு, சிபிஐ இயக்குநரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

மல்லிகார்ஜுன கார்கே
இதன் ஆலோசனைக் கூட்டம் கடந்த 24-ஆம் தேதி நடைபெற்றது. எனினும் எந்தவித முடிவும் எட்டவில்லை. இதையடுத்து நாளை மாலை 6 மணிக்கு இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதை மல்லிகார்ஜுன கார்கே உறுதி செய்தார்.

ரினா மித்ரா
இந்த நிலையில் சிபிஐ இயக்குநருக்கான தேர்வு குழுவினர் பெண் அதிகாரி உள்பட 11 ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த 11 பேரில் மத்திய பிரதேசத்தில் 1983-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவை சேர்ந்த ரினா மித்ரா முதலிடத்தில் உள்ளார்.

முதல் பெண் இயக்குநர்
அலோக் வர்மாவுடன் மோதலில் ஈடுபட்ட ராகேஷ் அஸ்தனாவின் பெயரும் அந்த பட்டியலில் உள்ளது. ஒரு வேளை நாளை நடைபெறும் கூட்டத்தில் ரினா மித்ரா தேர்வு செய்யப்பட்டால், சிபிஐயின் முதல் பெண் இயக்குநர் என்ற சாதனையை படைப்பார்.

முடிவு எடுக்கப்படவில்லை
சிபிஐ துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ரினா மித்ரா இதுவரை எந்த சர்ச்சைகளிலும் சிக்கவில்லை. மேலும் கறைபடியாத கைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். கடந்த 24-ஆம் தேதி நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் சிபிஐ இயக்குநருக்கான ரேஸில் உள்ளவர்கள் தொழில் விவரங்கள், முந்தைய அனுபவம் உள்ளிட்டவற்றை கொடுக்கவில்லை என்பதால் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications