ராமர் கோவில் விழா.. பிரதமர் மோடியின் நோக்கமே இதுதான்.. கடுகடுக்கும் ஓவைசி.. என்ன சொன்னார் பாருங்க
டெல்லி: ராமர் கோவில் கும்பாபிஷேகா விழாவை தானே முன்னின்று நடத்துவதன் மூலம் இந்திய அரசியலில் முஸ்லீம்களுக்கான இடம் எது என்பது பற்றி அவர்களுக்கு ஒரு தெளிவாக குறிப்பிட்டு காட்டுகிறார் என்று அசாதுதின் ஓவைசி விமர்சித்துள்ளார்.
ஐதராபாத் தொகுதி எம்.பியும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அசாதுதின் ஓவைசி, பாஜகவை அரசியல் ரீதியாக விமர்சித்து வருகிறார். பிரதமர் மோடியையும் மத்தியில் ஆளும் பாஜகவும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயல்படுவதாகவும் அவ்வப்போது மிகக் காட்டமாக விமர்சித்து வருவதை பார்க்க முடியும்.

இந்த நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை பிரதமர் மோடி முன்னின்று நடத்துவதாகவும் அரசியல் நோக்கோடு மோடி இதை செய்வதாகவும் ஓவைசி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அசாதுதீன் ஓவைசி கூறியதாவது:- ராமர் கோவில் விழா மூலம் பெரும்பான்மை சமூக வாக்குகளை ஒருங்கிணைப்பதே பிரதமர் மோடியின் நோக்கமாக உள்ளது. அரசியலில் இந்திய முஸ்லீம்களுக்கான இடம் என்ன என்பதை அவர்களுக்கு தெளிவாக மோடி சுட்டிக்காட்டுகிறார்" என்றார்.
அதே வேளையில், காங்கிரஸ் கட்சியையும் விமர்சித்த ஓவைசி, இது தொடர்பாக கூறியதாவது:- தேர்தல் ஆதாயத்திற்காக பெரும்பான்மை சமூகத்திற்கு அனுசரனையாக செல்வதில் எதிர்க்கட்சிகளும் பாஜகவில் இருந்து மாறுபட்டது இல்லை. அரசு பள்ளிகளில் வாரத்திற்கு ஒருமுறை அனுமன் மந்திரத்தையும் ராமர் பாடலையும் பாட வேண்டும் என்று டெல்லி ஆம் ஆத்மி அரசு கூறியுள்ளது. அரசு பள்ளிகளுக்கு மதம் உள்ளதா என்ன?
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோவிந்த் பல்லபா பண்ட் முதல்வராக இருந்தார். அப்போது மசூதிக்குள் சிலைகள் வைக்கப்பட்டன. அப்போதைய அயோத்தி கலெக்டர் கேகே நாயர், மசூதியை மூடிவிட்டு இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதித்தார். 1986 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தார். அப்போது மசூதியை மூடிவிட்டு இந்துக்களுக்கு மீண்டும் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்பிறகு 1982 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாஜக தலைவர்களால் மசூதி இடிக்கப்பட்டது. ராமர் கோவில் நிகழ்ச்சியில் மோடி அபகரித்து விட்டார் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் இன்று எதிர்க்கட்சிகள் கும்பாபிஷேக விழாவிற்கு செல்லவில்லை. மசூதி இருந்த இடத்தில் எப்படி ராமர் கோவில் கட்டப்பட்டது என்ற சித்தாந்த எதிர்ப்புக்காக அவர்கள் செல்லாமல் இல்லை.
அனைத்து எதிர்க்கட்சிகளும் என்ன சொல்கின்றன என்றால் மோடி அங்கு இல்லை என்றால் நாங்களும் அங்கு சென்று இருப்போம் என்கிறார்கள். ஆனால் யாருமே நான் சுட்டி காட்டிய மூன்று தேதிகளை பற்றி பேசவில்லை. ஏனென்றால் அனைவருமே பெரும்பான்மை சமூக வாக்குகளுக்காக சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு தோல்வியால் மசூதி இடிக்கப்பட்டு கோவில் கட்டுவதற்கான வழி ஏற்பட்டது பற்றி யாருமே பேசாதது ஏன்?" இவ்வாறு ஓவைசி காட்டமாக பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications