உத்தர பிரதேச தேர்தலில் கொரோனா பாதிப்பு எப்படி எதிரொலிக்கும்.. ஆர்எஸ்ஸ்-பாஜக ஆலோசனை கூட்டத்தில் மோடி
டெல்லி: அடுத்தாண்டு நடைபெறும் உத்தரப் பிரதேச தேர்தலில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து ஆர்எஸ்எஸ் - பாஜக நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடியும் உள் துறை அமைச்சர் அமித்ஷாவும் பங்கேற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரசின் தாக்கம் தொடர்கிறது. நாட்டில் முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையின் பாதிப்பு மோசமாகவே உள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது.
இந்த கொரோனா பரவல் அரசியல் ரீதியாகவும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. பிரதமர் மோடியின் பிம்பம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிந்துள்ளதாக அமெரிக்காவிலுள்ள ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தல்
இந்நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் உள்ளது. அரசியல் ரீதியாக உத்தரப் பிரதேச மாநிலம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால், உத்தரப் பிரதேசம் மொத்தம் 80 எம்பி சீட்டுகளைக் கொண்டுள்ளது. எனவே, அடுத்தாண்டு உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தல் முடிவுகள் என்பது, அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரு 2024 நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாக இருக்கும்.
கொரோனா பாதிப்பு
உத்தரப் பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருப்பதாகப் பலரும் தெரிவித்தனர். சில வாரங்களுக்கு முன்னர், அங்குள்ள கங்கை நதியில் சடலங்களை மிதந்து வந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள்ளேயே இருப்பதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து வருகிறார்.
பிரதமர் மோடி
எனவே, கொரோனா வைரஸை உபி அரசு கையாண்ட விதம் இந்தத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். அதேபோல பிரதமர் மோடிக்கும், இது மிக முக்கிய தேர்தல். கொரோனா வைரசை கையாள்வதில் பிரதமர் தோல்வியைடந்துவிட்டதாக, எதிர்க்கட்சிகள் முன் வைத்தும் விமர்சனங்கள் தேர்தல் களத்தில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் மக்கள் எந்தளவு அதிருப்தியில் உள்ளனர் என்பதையும் கண்டறிய தேர்தல் உதவும்.
ஆர்எஸ்எஸ் - பாஜக ஆலோசனை
இந்நிலையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு அடுத்தாண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தல்களில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் கொரோனாவால் பாஜகவுக்கு ஏற்பட்ட அவப்பெயரைத் தேர்தலுக்கு முன்னரே எப்படி போக்குவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
Array
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் தத்தாத்ரேயா ஹோஸ்போல் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கொரோனா 2ஆம் அலையில் நாட்டில் ஆக்சிஜன், மருந்துகள், மருத்துவமனைகளில் படுக்கைகள், தடுப்பூசிகள் என அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தொடர்பாகப் பிரதமர் மோடி மீது நேரடியாக கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இது ஆளும்கட்சிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவையெல்லாம் குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜே பி நட்டா கடிதம்
முன்னதாக, பாஜக தலைவர்கள் உடனடியாக களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என ஜே பி நட்டா கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், மோடி பதவியேற்று வரும் மே 30ஆம் தேதியுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அந்த கொண்டாட்டங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.