அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தன்று இதை பண்ணுங்க.. அமைச்சர்களுக்கு ஆர்டர் போட்ட பிரதமர் மோடி!
டெல்லி: அயோத்தி ராமர் கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வையொட்டி, ஏழைகளுக்கு உணவு அளிக்குமாறு, அனைத்து அமைச்சர்களையும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், ஆன்மீக துறவிகள் கலந்து கொள்ள உள்ளனர். அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படுவதையொட்டி, பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி 11 நாள் விரதத்தை மேற்கொண்டு வருகிறார்.

பிரதமர் மோடி விரதம்: பிரதமர் மோடி 11 நாட்கள் விரதத்தை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கினார். நாசிக்கின் புனித காலாராம் கோவிலில் விரதத்தை தொடங்கிய அவர் இந்தியாவில் உள்ள ராமர் தொடர்புடைய கோவில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் கோதாவரி நதிக்கரையில் உள்ள ராம்குந்திற்கு சென்று வழிபட்டார் பிரதமர் மோடி. பின்னர் பஞ்சவடியில் உள்ள கல்ராம் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். தொடர்ந்து ஆந்திராவின் லேபஷி பகுதியில் உள்ள வீரபத்ரர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். நேற்று கேரளா சென்ற பிரதமர் மோடி குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.
இந்நிலையில், தமிழ்நாட்டிலும் வழிபாடுகள் செய்ய உள்ளார் பிரதமர் மோடி. நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி, திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கம் செல்கிறார். அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு சாமி தரிசனம் செய்கிறார். அங்கும் கோவிலை சுத்தப்படுத்துகிறார். பிற்பகலில் ராமேசுவரத்திற்குச் செல்லும் பிரதமர் மோடி புகழ்பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையில் பங்கேற்கிறார். அதன்பின் கோவிலை சுத்தப்படுத்த உள்ளார்.
புனிதப் பயணம்: தொடர்ந்து, ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடுகிறார். பிறகு மீண்டும் ராமேசுவரம் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையிலும் பங்கேற்கிறார். அதன் பிறகு கார் மூலம் அரிச்சல்முனைக்கு சென்று, கோதண்டராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையிலும் பங்கேற்கிறார். பின்னர் கடலில் புனித தீர்த்தங்களைச் சேகரிக்கும் அவர், புனிதநீர் கலசங்களுடன் டெல்லி புறப்படுகிறார்.
22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்குச் செல்கிறார் மோடி. ராமேஸ்வரத்தில் இருந்து எடுத்துச் செல்லும் தீர்த்தத்தை அயோத்திக்கு கொண்டு செல்கிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி சொகுசு படுக்கையில் தூங்காமல் மரக்கட்டிலில் போர்வை விரித்து தூங்குகிறார். மேலும் பழங்கள், இளநீர் உள்ளிட்ட சாத்வீகமான உணவையே எடுத்துக்கொண்டு வருகிறார். இந்த நாட்களில் அவர் சில மந்திரங்களையும் உச்சரித்து வருகிறார்.
அமைச்சர்களுக்கு ஆர்டர்: இந்நிலையில், அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வையொட்டி, தனது அமைச்சரவை சகாக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் பிரதமர் மோடி. ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வையொட்டி, தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வணங்குமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரதமர் மோடி.
மேலும், ஏழைகளுக்கு உணவு அளிக்குமாறு, அனைத்து அமைச்சர்களையும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அமைச்சர்கள் அனைவரும், அயோத்தி ராமர் கோவிலுக்கு, மக்களுடன் சேர்ந்து ரயில்களில் வருமாறும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications