"சின்ன வயசுல எனக்குனு ஒரு வீடு கூட இல்ல.." விழா மேடையில் கண் கலங்கிய பிரதமர் மோடி! அடுத்து என்னாச்சு
டெல்லி: ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தனது இளமைக் காலம் குறித்துப் பேசும் போது கண்கலங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது தனது இளமைக் காலம் குறித்து பேசும்போது பிரதமர் மோடி கண் கலங்கினார்.

தனது இளமைக் காலத்தில் இதுபோன்ற வீட்டில் தங்குவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சொல்லும் போது பிரதமர் மோடி கண்கலங்கினார்.
பிரதமர் மோடி: மகாராஷ்டிராவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "இந்த பிராஜக்டை நான் பார்த்தேன்.. உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த வீடுகள் மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. நான் குழந்தையாக இருந்த போது எனக்கும் இதுபோன்ற ஒரு வீட்டில் வசிக்க வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருந்து இருக்கும்" என்று அவர் சொல்லும் போது கண் கலங்கிப் போனார்.
மகாராஷ்டிராவில் PMAY-அர்பன் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட 90,000 வீடுகளையும், சோலாப்பூரில் உள்ள ராய்நகர் ஹவுசிங் சொசைட்டியில் கட்டி முடிக்கப்பட்ட 15,000 வீடுகளையும் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு வழங்கினார். மகாராஷ்டிராவில் கட்டி முடிக்கப்பட்ட இந்த பிராஜக்ட் தான் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவின் கீழ் கட்டப்பட்ட நாட்டின் மிகப்பெரிய திட்டம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சொத்து: சோலாப்பூரில் கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகள் பெரும்பாலும் கைத்தறி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், பீடி தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகியோருக்கே அதிகம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மேலும் பேசுகையில், "மக்களின் கனவுகள் நனவாகும் போது மகிழ்ச்சி வரும். அந்த மகிழ்ச்சியில் அவர்கள் தரும் ஆசியே எனது மிகப்பெரிய சொத்து" என்று அவர் கூறினார்.
மகாராஷ்டிராவில் சுமார் ₹ 2,000 கோடி மதிப்பிலான 8 அம்ருத் (புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன்) திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் சோலாப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
ராமர் கோயில்: ராமரின் நேர்மையான கொள்கைகளையே தனது அரசு பின்பற்றுவதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, அயோத்தி ராமர் கோவிலில் பிரமாண்ட கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான ஜனவரி 22ஆம் தேதி நாடு முழுக்க இருக்கும் மக்கள் ராமர் ஜோதியை ஏற்றுமாறி கோரிக்கை விடுத்தார்.
பிரதமர் மோடி மேலும் பேசுகையில், "மோடியின் உத்தரவாதம் என்பது கண்டிப்பாக நிறைவேற்றப்படும் உத்தரவாதம் என்பது அனைத்து மக்களுக்கும் தெரியும்.. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மதிக்க வேண்டும் என்பதை ராமர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார், ஏழைகளின் நலனுக்காகவும் அவர்களின் அதிகாரமளிக்கவும் நாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நாங்கள் நிறைவேற்றுகிறோம்," என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியின் போது மகாராஷ்டிராவில் 10,000 பேருக்குப் பிரதமர் மோடி PM-SVANIDHI உதவித் தொகையை வழங்கினார்.
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் ஜன. 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் ஜனவரி 22இல் மக்கள் அயோத்திக்கு வர வேண்டாம் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். அதற்குப் பதிலாகத் தீபாவளி போல அன்றைய நாளில் தங்கள் வீட்டில் தீபம் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்றும் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார்.












Click it and Unblock the Notifications