போபாலில் இருந்து டெல்லி சென்றதுமே திடீர் மீட்டிங்.. ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்த பிரதமர் மோடி!
டெல்லி: இன்று மாலை டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசியுள்ளார்.
Recommended Video
டெல்லியில் அமைந்துள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பேசினார். பிரதமர் மோடி, அமெரிக்கா, எகிப்து பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ள நிலையில் இன்று ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக கலவரம் நீடித்து வருகிறது. மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத பாஜக முதல்வர் பைரேன் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி போர்க்கொடி தூக்கி வருகிறது.
இந்நிலையில், மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் 120க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், மணிப்பூரில் நிலவி வரும் கலவரம் குறித்து அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்க்கி, நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து விளக்கம் அளித்திருந்தார்.
மணிப்பூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து குடியரசுத் தலைவர் முர்முவிடம், மணிப்பூர் ஆளுநர் விளக்கம் அளித்திருந்த நிலையில், இன்று பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி சந்திப்பு நிகழ்ந்து உள்ளது. ராஷ்டிரபதி பவனின் ட்விட்டர் கணக்கில், "பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி திரௌபதி முர்முவை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார்" என்று ட்வீட் செய்யப்பட்டுள்ளது.
இன்று மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் இருந்து ஐந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பிறகு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, பொது சிவில் சட்டத்தை ஆதரித்துப் பேசினார்.
அதன்பிறகு டெல்லி சென்ற பிரதமர் மோடி, குடியரசுத் தலைவரைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்புக்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும், மணிப்பூர் வன்முறைச் சூழல் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications