இந்தியாவுடன் அரசியல் பொருளாதார நட்பு...மகிந்த ராஜபக்ச ட்வீட்டுக்கு மோடியின் பதில் இதுதான்!!
டெல்லி: இந்தியா, இலங்கை உறவுகளை மறுஆய்வு செய்ய வேண்டும். கொரோனாவுக்குப் பின்னர் இந்தியா இலங்கை ஒத்துழைப்பை மேம்படுத்த வழி காண வேண்டும் என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ட்வீட்டுக்கு பிரதமர் மோடி இன்று பதில் அளித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் மோடி மற்றும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச இருவருக்கும் இடையிலான மெய்நிகர் இருநாட்டு உச்சிமாநாடு வரும் செப்டம்பர் 26ஆம் தேதி துவங்குகிறது. இதை முன்னிட்டு இன்று மகிந்த ராஜபக்ச ட்விட்டரில் ஒரு பதிவை இட்டுள்ளார்.

பாதுகாப்பு
அதில், ''இந்தியப் பிரதமருடன் தொடர்பு கொள்ள எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். செப்டம்பர் 26 அன்று திட்டமிடப்பட்ட மெய்நிகர் உச்சி மாநாட்டில். அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிற பகுதிகளிலிருந்து நமது நாடுகளுக்கு இடையிலான பன்முக இருதரப்பு உறவை மறுபரிசீலனை செய்ய எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

மறுஆய்வு
இந்தப் பதிவுக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். அந்த பதிலில், ''நானும் நமது இருதரப்பு உறவை விரிவாக்க, மறுஆய்வு செய்ய எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன். கொரோனாவுக்கு பின்னர் நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை நாம் ஆராய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

எல்லை பதற்றம்
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் எல்லையில் பதட்டம் நிலவி வரும் நிலையில் எல்லை நாடுகளுடன் ஒத்துழைப்பு நல்குவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக வரும் 26ஆம் தேதி இருநாடுகளுக்கும் இடையே உச்சி மாநாடு நடக்கிறது.

தூதரகம்
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பல்வேறு வர்த்தக உறவுகளும் நீடித்து வருகிறது. எல்லையில் நேபாளத்துடன் ஏற்கனவே இந்தியாவுக்கு மோதல் முற்றி வரும் நிலையில், இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள இந்தியா தூதரக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

டெர்மினல்
இலங்கையில் கடந்த முறை அதிபராக இருந்த மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இந்தியாவுக்கு இணக்கமான உறவு இருந்து வந்தது. கொழும்புவில் நடந்து வரும் இந்தியாவின் கிழக்கு கண்டெய்னர் டெர்மினல் திட்டம் கடந்த ஆட்சியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த திட்டத்தில் இந்தியா , ஜப்பான் இணைந்துள்ளது. இந்த திட்டத்தால் இந்தியா அதிகளவில் பயன் பெறும் என்று தெரிய வந்துள்ளது.

இந்தியாவிடம் கடன்
இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச ஒரு கமிட்டியை நியமித்து இருக்கிறார். இதற்கு முந்தைய சந்திப்பின்போது, பிரதமர் மோடியிடம் 1.1 பில்லியன் டாலர் அளவிற்கு கோத்தபய கடன் கேட்டு இருந்தார். இந்த நிலையில் இருநாட்டுக்கும் இடையே உச்சி மாநாடு சந்திப்பு நடக்க இருக்கிறது.












Click it and Unblock the Notifications