ஹலோ.. மிஸ்டர் டிரம்ப்! ஹேப்பி நியூ இயர்.. தொலைபேசி வழியே பேசி பிரதமர் மோடி ஆலோசனை
டெல்லி: பிரதமர் மோடி இந்த ஆண்டில் முதன்முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் தொலைபேசி மூலம் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இரு தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். இந்தியா - அமெரிக்கா நாடுகளின் நல்லுறவு கடந்த ஆண்டில் திருப்திகரமாக அமைந்திருந்ததை சுட்டிக்காட்டி அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்கா-இந்தியா இருதரப்பு பேச்சுவார்த்தை மற்றும் அமெரிக்கா-இந்தியா-ஜப்பான் முத்தரப்பு மாநாடு ஆகியவை இந்த வளர்ச்சிக்கு துணை புரிந்தது.
இதன் எதிரொலியாக பாதுகாப்புத்துறை, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை, எரி சக்தி, ஆப்கானிஸ்தான் நிலவரம், தாலிபன் தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள், இருநாடுகளுக்கு இடையில் சாதகமான விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.
இந்த நல்லுறவை பலப்படுத்தும் வகையில் இதேபோல் இந்த ஆண்டிலும் நட்புறவுடன் இணைந்திருந்து பணியாற்ற டிரம்ப்பும், மோடியும் விருப்பம் தெரிவித்தனர். இந்த ஆலோசனையின்போது சர்வதேச அரசியல் நிலவரம் குறித்தும் கருத்துகளை அவர்கள் பரிமாறிக் கொண்டனர்.
இதனிடையே, ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் டாரா கொனா 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். இதையடுத்து டெல்லியில், பிரதமர் மோடியை சந்தித்த டாரா கொனா இருநாடுகளுக்கு இடையேயான வெளியுறவுக் கொள்கைகள், நல்லுறவு, சர்வதேச ஒப்பந்தம் குறித்து விவாதித்தார். அப்போது 2019ம் ஆண்டு நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.