குடியரசுத் தலைவர்.. குடியரசுத் துணைத் தலைவரை சந்தித்து.. தீபாவளி வாழ்த்து பகிர்ந்துக்கொண்ட மோடி!
டெல்லி: நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் தீபாவளி பண்டிகையை கடற்படையினருடன் சேர்ந்து பிரதமர் மோடி கொண்டாடி இருந்தார். இதனையடுத்து இன்று மாலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து பிரதமர் தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துக்கொண்டார்.
இந்தச் சந்திப்பின் புகைப்படங்களை குடியரசுத் தலைவர் அலுவலகம், சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, "பிரதமர் நரேந்திர மோடி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டார்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

முன்னதாக, பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்துக்களை நாட்டு மக்களுக்கு எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். "தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த ஒளிமயமான திருநாள் நமது வாழ்வில் நல்லிணக்கம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும். நேர்மறையான எண்ணங்கள் நம்மைச் சூழ்ந்திருக்கட்டும்" என்று அவர் பதிவிட்டிருந்தார்.
மேலும், இந்த ஆண்டு தீபாவளியை பிரதமர் மோடி, இந்தியாவின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பலில், இந்திய கடற்படை வீரர்களுடன் கொண்டாடினார். கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் மத்தியில் உரையாற்றிய மோடி, போர்க்கப்பலின் முக்கியத்துவத்தை பாராட்டினார்.
அவர், "ஐஎன்எஸ் விக்ராந்தின் பெயரைக் கேட்டாலே பாகிஸ்தானுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது. அதன் பெயர் மட்டுமே எதிரியின் துணிச்சலைக் குலைக்கும் என்றால், அதுதான் ஐஎன்எஸ் விக்ராந்த்" என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications