அவசர நிலை எதிர்ப்பில் தீவிரமாக பங்கேற்றவர் கே.என். லட்சுமணன்- மோடி புகழஞ்சலி
டெல்லி: நாட்டின் அவசர நிலை எதிர்ப்பு போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்றவர் மறைந்த பாஜகவின் மூத்த தலைவர் கே.என். லட்சுமணன் என்று பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமிழக பாஜகவின் தலைவராகவும் எம்.எல்.ஏ.வாகவும் திகழ்ந்தவர் கே.என். லட்சுமணன். முதுமை, உடல்நலக் குறைவால் சேலத்தில் திங்களன்று லட்சுமணன் காலமானார்.
அவரது மறைவுக்கு இரங்கல் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், தமிழக மக்களுக்கு பணியாற்றுவதிலும் தமிழகத்தில் பாஜகவை வளர்ச்சி அடைய வைத்ததிலும் பெரும் பங்காற்றியவர் லட்சுமணன். அவசரநிலை காலத்தில் அவரது பங்களிப்புகள் நினைவுகூறத்தக்கவை. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
பாஜக சீனியர் தலைவர் கே.என். லட்சுமணன் காலமானார்-பெரியாருக்கு எதிராக சேலம் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்!
திமுக தலைவர் ஸ்டாலின் தமது இரங்கல் செய்தியில், தமிழக பா.ஜ.க.,வின் முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் தனது சேலம் செவ்வாய்பேட்டை இல்லத்தில் மறைவெய்திய செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். கொள்கை ரீதியாக மாற்று முகாமில் இருந்தாலும் கருணாநிதி மீது மிகுந்த அன்பு கொண்டவர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க. இடம் பெற்றிருந்தபோது மயிலாப்பூர் தொகுதியில் லட்சுமணன் வெற்றி பெற்ற நிகழ்வு நிழலாடுகிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், கட்சிப் பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு தி.மு.கழகத்தின் சார்பில் ஆறுதலைத் தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தமது இரங்கல் செய்தியில், அரசியல் , ஆன்மீகம் ,கல்வி என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அமரர் கே.என். இலட்சுமணன் அவர்களின் இழப்பு மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பாகும் என கூறியுள்ளார்.