நவ1:ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ம.பி, சத்தீஸ்கர், ஹரியானா மாநிலங்கள் உருவான நாள்-பிரதமர் மோடி வாழ்த்து
டெல்லி: மொழிவாரியாக ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ம.பி., சத்தீஸ்கர் மற்றும் ஹரியானா மாநிலங்கள் உருவான தினத்தை (நவம்பர் 1) முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
நாடு விடுதலை அடைந்த போது சமஸ்தானங்களாக, மாகாணங்களாக பல பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. உதாரணமாக சென்னை மாகாணத்தில் இன்றைய ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ஒடிஷா மாநில பகுதிகள் இணைந்திருந்தன.
பின்னர் மாகாணங்களை மொழிவாரி மாநிலங்களாக பிரிக்க கோரி ஆந்திராவில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் விரிவடைந்தது. ஆந்திராவின் பொட்டி ஶ்ரீராமுலு இதற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்த்தியாகம் செய்தது வரலாறு. இதையடுத்து மாகாணங்கள், மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன.

பிரிந்த மாநிலங்கள்
1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி நாட்டின் பல்வேறு மாகாணங்கள் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் உதயமாகின. இதேபோல் 1956 நவம்பர் 1-ல் மத்திய பாரத், விந்திய பிரதேசம், போபால் சமஸ்தானங்களை உள்ளடக்கிய பகுதிகளை இணைத்து மத்திய பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்த மத்திய பிரதேசத்தில் இருந்து 2000-ம் ஆண்டு நவம்பர் 1-ல் சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. 1966-ம் ஆண்டு கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ஹரியானா மாநிலம் உருவாக்கப்பட்டது.

பிரதமர் மோடி வாழ்த்து
இம்மாநிலங்கள் அனைத்தும் நவம்பர் 1-ந் தேதியை மாநிலங்கள் உருவான நாளாக அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றன. இதனையொட்டி இந்த 6 மாநில மக்களுக்கும் பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

6 மாநில மொழிகளில் வாழ்த்து
ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலியின் ரோம் நகருக்கு சென்றிருந்தார் பிரதமர் மோடி. ஜி20 மாநாடு முடிவடைந்த நிலையில் இன்று ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகர் சென்றார் பிரதமர் மோடி. அங்கு பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 6 மாநில மொழிகளில் அம்மாநில மக்களுக்கு மாநிலங்கள் உருவான நாளுக்கான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 1- தமிழ்நாடு நாள் சர்ச்சை
சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டு புதிய மாநிலங்கள் உருவான நவம்பர் 1-ந் தேதியை தமிழ்நாடு நாள் என கொண்டாடுவதாக முந்தைய அதிமுக அரசு அறிவித்தது. ஆனால் தற்போதைய திமுக அரசு, தமிழ்நாடு என பெயர் சூட்டும் தீர்மானத்தை நீண்ட போராட்டத்துக்குப் பின் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ந் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது. இது தொடர்பான முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications