ரூ.2000 நோட்டு.. பிரதமருக்கு சம்மதம் இல்லை.. ஒருமித்த கருத்துக்கு ஓகே சொன்னார்..நிருபேந்திர மிஸ்ரா!
டெல்லி: 2016ஆம் ஆண்டில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த பின்னர் ரூ. 2000 நோட்டுக்களை வெளியிடுவதில் பிரதமர் மோடிக்கு சம்மதம் இல்லை. அதிக மதிப்பு கொண்ட பணத்தை புழக்கத்தில் விட்டால் பணம் புழக்கம் ஏற்படும் என்ற ஒருமித்த கருத்தை ஏற்றுக் கொண்டார் என்று பிரதமர் மோடிக்கு முதன்மை செயலாளராக இருந்த நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இன்று பிரதமர் மோடியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு டைம்ஸ் ஆப் இந்தியாவில் நிருபேந்திர மிஸ்ரா சிறப்புக் கட்டுரை எழுதியுள்ளார். அதில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

நிறுவன கட்டமைப்பு
மேலும் அவர் அதில், ''பிரதமர் மோடி ஆலோசனையை அல்லது கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் நிறுவன கட்டமைப்பிற்காக ஒருமித்த கருத்து இருக்க வேண்டும் என்பதற்காக ஏற்றுக் கொண்டு இருந்தார்.

ஆலோசனை
ரூபாய் நோட்டு தடை செய்த பின்னர் பணம் கிடைப்பதில் ஏற்படும் சிக்கலை பெரிய மதிப்பிலான ரூபாய் நோட்டு தீர்க்கும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்டார். இந்த தவறை சரி செய்யும் வகையில் தற்போது ரூ. 2000 நோட்டு அச்சிடுவது குறித்து சரியான நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுத்து வருகிறார். அதற்காக ஆலோசனை வழங்கியவர்களை அவர் குற்றம்சாட்டவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

கறுப்புப் பணம்
பிரதமர் மோடி 2016ஆம் ஆண்டில் ரூ. 500, ரூ. 1000 நோட்டுக்களை ஒரே நாள் இரவில் தடை செய்து இருந்தார். கறுப்புப் பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. ஆனால், இதையடுத்து புதிய ரூபாய் நோட்டுக்கள் கிடைக்காமலும், பழைய ரூயாய் நோட்டுக்கள் கிடைக்காமலும் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை பதுக்குகின்றனர், வரி ஏய்ப்பு செய்ய பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

ஏடிஎம்
புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ. 1000 நோட்டுக்களில் 86 சதவீத பணத்தை மட்டுமே வங்கிகள் மூலம் ரிசர்வ் வங்கியாலும் மத்திய அரசாலும் திரும்ப பெற முடிந்தது. இதுவும் மக்களிடம் பணப் புழக்கத்தை குறைத்தது. இதனால், மக்கள் தினமும் தங்களது அன்றாட தேவைகளுக்கு கூட வங்கிகள் மற்றும் ஏடிஎம் முன்பு நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

போலி 2000
பதுக்கலையும், கறுப்புப் பணத்தையும் தடுப்பதற்காகவே ரூ. 1000 நோட்டு ரத்து செய்யப்பட்டது. புதிய 500 ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், புதிய 2000 ரூபாயை நிலைமையை சமாளிக்க வெளியிடப்பட்டது. இது கேள்வியை எழுப்பி இருந்தது. ஆயிரம் ரூபாயை தடை செய்து விட்டு ஏன் இரண்டாயிரம் ரூபாயை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. இதுவும், அறிமுகம் செய்யப்பட்டவுடன் மக்களின் கைகளுக்கு கிடைக்கவில்லை. இதுவும் பதுக்கப்பட்டது. புதிய ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வருவதற்கு முன்பு போலி இரண்டாயிரம் ரூபாய் நோட்டும் சந்தைக்கு வந்தது. இது மக்களிடையே பெரிய அளவில் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.

ரிசர்வ் வங்கி
இதையடுத்து 2018-19 நிதியாண்டின் இறுதியில் ரூ. 2000 நோட்டுக்களை அச்சிடுவதை மத்திய அரசு நிறுத்திக் கொண்டது. இதைத் தொடர்ந்து நடப்பு நிதியாண்டிலும் இந்த ரூபாய் நோட்டுக்கள் அச்சிடவில்லை என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications