ஜம்மு காஷ்மீர்: சிறப்பு அந்தஸ்து இல்லாமல் முழு மாநில தகுதி வழங்க உறுதி அளிப்பார் பிரதமர் மோடி?
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இல்லாமல் முழு மாநில தகுதி வழங்க இன்றைய டெல்லி கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி அளிக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு ரத்து செய்யபட்டு 2 ஆண்டுகளாகிவிட்டன. ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தலும் நடத்தப்படவில்லை.
ஜம்மு காஷ்மீர் விவகாரம்: அனைத்து கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி டெல்லியில் இன்று ஆலோசனை
டெல்லியில் ஆலோசனை
இந்த நிலையில் டெல்லியில் ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்வர்கள் குலாம் நபி ஆசாத், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இன்று மாலை 3 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீர் தேர்தல்
இன்றைய கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடத்துவது தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது முதன்மையான பணி. இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பை கேட்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
சிறப்பு அந்தஸ்து, மாநில தகுதி
அதேநேரத்தில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்துவது; ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது ஆகிய கோரிக்கைகளை அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்த உள்ளனர்.
மாநில அந்தஸ்துக்கு உறுதி?
ஆனால் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிற நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இருப்பினும் உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என ஏற்கனவே உறுதி அளித்திருக்கிறது. அதனால் மாநில அந்தஸ்து வழங்குவதற்கான உறுதி மொழியை பிரதமர் மோடி இன்றைய கூட்டத்தில் வழங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.