முப்படைகளின் தளபதி பிபின் ராவத்... உள்பட 13 பேர் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
டெல்லி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அவரது மதுலிகா ராவத் உள்பட 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட ராணுவ அதிகாரி வருண் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களும் குன்னூரில் இருந்து சாலை மார்க்கமாக கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ராணுவ விமானத்தில் 13 பேரின் உடல்களும் டெல்லிக்கு இரவு 7.35 மணியளவில் கொண்டு செல்லப்பட்டது. தலைநகர் டெல்லியில் விமான நிலையம் அருகே பொதுமக்களின் அஞ்சலிக்காக 13 பேரின் உடல்கள் வைக்கப்பட்டது.
விமானம் நிலையப் பகுதிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் பிபின் ராவத்தின் மகள்களுக்கும் மற்ற ராணுவ அதிகாரிகளின் உறவினர்களுக்கும் பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். இதை அடுத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய்பட், பாதுகாப்புத்துறை செயலாளர் அஜித் தோவல் சிங் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் 13 பேரின் உடல்களுக்கு ராணுவம், கப்பல், விமானப் படைகளின் உயரதிகாரிகளும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து உறவினர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications