உதயநிதி ஸ்டாலின் விடுத்த அழைப்பு.. ‘ஓகே’ சொன்ன பிரதமர் மோடி! மீண்டும் தமிழ்நாட்டுக்கு கிளம்புறாராமே!
டெல்லி: கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்பதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நடத்தப்படும் இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் ஜனவரி 19ஆம் தேதி முதல் ஜனவரி 31 வரை நடைபெற உள்ளது.

கேலோ இந்தியா போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 5,500க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மேலும் 1600-க்கும் மேற்பட்ட பணியாளர்கள்கள், 1000-க்கும் மேற்பட்ட நடுவர்கள், 1200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 27 வகையான பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகிறது.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை பிரதமர் மோடியிடம் வழங்கி நிறைவு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காக தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி சென்றார். நேற்று டெல்லி சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, டெல்லி விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன், திமுக எம்.பி எம்.எம். அப்துல்லா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
உதயநிதி ஸ்டாலினுடன், விளையாட்டுத்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோரும் டெல்லி சென்றுள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது கேலோ இந்தியா போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்து அழைப்பிதழை வழங்கினார்.

தொடர்ந்து, டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர், அங்கிருந்து கிளம்பும்போது காரில் இருந்தபடி, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், கேலோ இந்தியா போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த வாய்ப்பு கொடுத்திருந்தார் பிரதமர் மோடி. தொடக்க விழாவுக்கு அழைப்பதற்காக அவரிடம் நேரம் கேட்டிருந்தேன். ஜனவரி 19ஆம் தேதி நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க சென்னைக்கு வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புக்கான நிவாரண நிதியை உடனே வழங்குமாறு திருச்சி வந்த பிரதமரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை வைத்தார். அதனை பிரதமரிடம் நினைவுப்படுத்திக் கோரிக்கை விடுத்தேன். வெள்ள நிவாரண நிதியை விரைவில் வழங்குவதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், சகோதரர் ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவரிடம் பேசியதை இப்போது சொல்ல முடியாது. மணிப்பூரில் இருந்து தொடங்க உள்ள பாதயாத்திரை குறித்து பேசினார் எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, கடந்த 2ஆம் தேதி திருச்சிக்கு வருகை தந்தார். திருச்சியில் விமான நிலைய முனையத்தை திறந்து வைத்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். மேலும், பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிலையில், ஜனவரி 19ஆம் தேதி மீண்டும் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளதை, உதயநிதி பேச்சு உறுதிப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications