"ரொம்ப வருத்தமாக இருக்கு.." பிரதமர் மோடி சொன்ன வார்த்தை! டக்குனு திரும்பி பார்த்த ஆஸ்திரேலிய பிரதமர்
ஆஸ்திரேலியா பிரதமர் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
டெல்லி: ஆஸ்திரேலியா மற்றும் இந்தியப் பிரதமர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த நிலையில், ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள் நாசப்படுத்தப்பட்டதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, அவை வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸ் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அந்தோணி அல்பானிஸ் பிரதமராகத் தேர்வான பிறகு, அவர் இந்தியாவுக்கு வந்துள்ளது இதுவே முதல்முறையாகும்.
மேலும், ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக இருந்த நல்லுறவில் இப்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அவர் இங்கு வந்துள்ளதும் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியா வந்த அந்தோணி அல்பானிஸ்
இந்தியா வந்துள்ள அந்தோணி அல்பானிஸ் பிரதமர் மோடியுடன் இணைந்து இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியை பார்த்து ரசித்தார். மேலும், குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்ற அவருக்குச் சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரமதர் நரேந்திர மோடி உடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதில் இரு நாட்டு உறவுகள் தொடங்கி பலவேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதன் பிறகு கூட்டாக இரு நாட்டுப் பிரதமர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்,

பிரதமர் மோடி
ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களில் பல இந்து கோயில்கள் நாசப்படுத்தப்பட்டுள்ளது. அதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களுக்குப் பிறகு இந்தியச் சமூகத்தின் பாதுகாப்பு குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் உறுதியளித்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், "கடந்த சில வாரங்களாக ஆஸ்திரேலியாவில் இருந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வருவது வருத்தமளிக்கிறது.

கவலை தருகிறது
இது போன்ற செய்திகள் இந்தியாவில் உள்ள அனைவரையும் கவலையடையச் செய்கிறது. மனதைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இந்த கவலைகளை ஆஸ்திரேலியா பிரதமரிடம் தெரிவித்தேன்.. மேலும் இந்திய சமூகத்தின் பாதுகாப்பிற்குச் சிறப்பு முன்னுரிமை அளிப்பதாக அவர் எனக்கு உறுதியளித்தார். இரு நாடுகளும் இந்த விஷயத்தில் தொடர்ந்து இணைந்தே செயல்படுவோம். இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் முடிந்தவரை ஒத்துழைப்பு தருவோம்" என்றும் அவர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா
கடந்த வாரம், பிரிஸ்பேனில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயண் கோயில் காலிஸ்தான் ஆதரவு ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் இரண்டு மாதங்களில் இந்துக் கோவில்களுக்கு எதிரான நான்காவது சம்பவம் இதுவாகும். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களில் ஒன்று காலிஸ்தான் ஆதரவு இயக்கம். இவர்கள் பஞ்சாபை உள்ளடக்கிய பிராந்தியங்களைத் தனியாக காலிஸ்தான் என்று அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்து கோயில்கள்
இந்தியாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்ட போதிலும், பல வெளிநாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கும் அமைப்புகளும் தடை விதிக்கப்படவில்லை. இதனால் அங்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே இயங்கி வருகிறார்கள்.. குறிப்பாகக் கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இயங்கி வருகிறார்கள். அவர்கள் தொடர்ச்சியாக இந்தியாவுக்கும் இந்திய அரசுகளுக்கும் எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்..

சேதம்
ஜனவரி 23ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் அங்குள்ள இந்து கோவில் ஒன்றைச் சேதப்படுத்தினர்.. கோயில் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசங்களையும் எழுதினர். அதேபோல ஜனவரி 16ஆம் தேதி விக்டோரியாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ சிவ விஷ்ணு ஆலயமும் இதேபோல் நாசப்படுத்தப்பட்டது. ஜனவரி 12 அன்று, மெல்போர்னில் உள்ள ஸ்வாமிநாராயண் கோவிலிலும் இந்திய எதிர்ப்பு வாசங்கள் இருந்தன.












Click it and Unblock the Notifications