தோல் நிறத்தை வைத்து அவமதிப்பதா? பொறுக்க முடியாது.. சாம் பிட்ரோடா பேச்சால் கொந்தளித்த பிரதமர் மோடி!
டெல்லி: "என் மீது அவதூறுகளை வீசினால் பொறுத்துக்கொள்வேன். ஆனால், நாட்டு மக்கள் தோல் நிறத்தின் அடிப்படையில் அவமதித்தால் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டேன்" என்று ஆவேசமாக கூறியுள்ளார் பிரதமர் மோடி.
வெளிநாடுகளுக்கான காங்கிரஸ் கட்சித் தலைவராக இருப்பவர் சாம் பிட்ரோடா. இவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அதிகாரப்பூர்வ ஆலோசகராக இருந்தவர். அமெரிக்காவில் வசித்து வரும் சாம் பிட்ரோடாவின் சமீபத்திய கருத்துகள் இந்தியாவில் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன.

முன்னணி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த சாம் பிட்ரோடா, "பல்வகைத்தன்மை கொண்ட ஜனநாயக நாட்டுக்கு இந்தியா ஒரு சிறந்த உதாரணம். இந்தியாவின் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்கள் போலவும், தெற்கு பகுதியில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள். ஆனால் இதெல்லாம் ஒரு பொருட்டல்ல, நாங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள்" என்று பேசியுள்ளார்.
சாம் பிட்ரோடாவின் இந்தப் பேச்சை குறிப்பிட்டு பாஜகவினர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இன்று தெலுங்கானா மாநிலம் வாராங்கல்லில் நடந்த தேர்தல் பிரச்சார பேரணியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி சாம் பிட்ரோடா கருத்தைச் சுட்டிக்காட்டி காட்டமாக விமர்சித்துள்ளார்.
"சாம் பிட்ரோடாவின் இந்த இனவெறி மனப்பான்மையை நாங்கள் ஏற்க மாட்டோம். ராகுல் காந்தி, இதற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். எனது நாட்டு மக்களை அவர்களின் தோல் நிறத்தின் அடிப்படையில் அவமதிப்பதை எனது நாடு பொறுத்துக் கொள்ளாது. என் மீது அவதூறுகள் வீசப்படும்போது என்னால் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால், நாட்டு மக்கள் மீது அவதூறை வீசினால் இந்த மோடி ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டேன்." என்று ஆவேசமாக கூறியுள்ளார் பிரதமர் மோடி.
மேலும், "தோலின் நிறத்தின் அடிப்படையில் ஒருவரின் தகுதியை நாம் தீர்மானிக்க முடியுமா? என் மக்களை இப்படிக் கேவலமாகப் பார்க்க, இளவரசரை அனுமதித்தது யார்? பழங்குடியினப் பெண்ணான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைப் பற்றி நான் நிறைய யோசித்திருக்கிறேன். அவரை குடியரசுத் தலைவர் தேர்தலில் தோற்கடிக்க காங்கிரஸ் ஏன் அவ்வளவு முயற்சி செய்தது? இன்றுதான் அதற்கான காரணம் தெரிந்து கொண்டேன்.
இளவரசரின் (ராகுல்) தத்துவ வழிகாட்டியான அங்கிள் ஒருவர் அமெரிக்காவில் இருக்கிறார். கிரிக்கெட்டில் மூன்றாவது நடுவரைப் போலவே அமெரிக்காவில் இருக்கும் அந்த தத்துவ வழிகாட்டி மாமாவின் கருத்தைத்தான் இளவரசரும் ஏற்றுச் செயல்படுத்துகிறார். அவர்தான் இப்போது, கறுப்பு தோல் கொண்டவர்கள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள்' எனக் கூறி இருக்கிறார். இதைத்தான் அப்போதும் காங்கிரஸ் பிரதிபலித்திருக்கிறது" எனப் பேசியுள்ளார் பிரதமர் மோடி.
இந்நிலையில், "இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக சாம் பிட்ரோடா ஒரு பாட்காஸ்டில் தெரிவித்த ஒப்புமைகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. காங்கிரஸ் கட்சி இந்த ஒப்புமைகளிலிருந்து தம்மை முழுமையாக விலக்கிக் கொள்கிறது" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications