தமிழகத்தில் 1967க்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கவில்லையே! ராகுலுக்கு, லோக்சபாவில் மோடி பதிலடி
டெல்லி: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 1967 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆட்சிக்கு வர முடியவில்லை என பிரதமர் நரேந்திர மோடி கடும் விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் பாஜக ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது என ராகுல் காந்தி பேசியிருந்த நிலையில் அதற்கு பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் ஏழைத் தாய்கள் இலவச சமையல் எரிவாயு மூலம் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அரசு திட்டங்கள் மூலம்
சொந்த வீடு கட்டி ஏழைகள் லட்சாதிபதியாகியுள்ளனர்.
ஏழை மக்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் சென்று சேர்கிறது. பலர் இன்னும் 2014-ஆம் ஆண்டிலேயே பின்தங்கியுள்ளனர். தமிழகத்தில் 1967 ஆம் ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியவில்லை.

லோக்சபாவில் பதில்
அரசியல் கட்சிகள் பற்றி லோக்சபாவில் பேசியதால் இதற்கு நான் பதில் தர வேண்டியுள்ளது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க மக்கள் அனுமதிக்கவேயில்லை. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி பல மாநிலங்களில் கை விட்டு போன பிறகும் அகங்காரம் குறையவில்லை. பல முறை தோல்வியை சந்தித்த பிறகும் காங்கிரஸ் கட்சி பாடம் கற்கவில்லை.

கண்களை மூடி விமர்சனம்
எப்போதும் கண்களை மூடிக்கொண்டு விமர்சனம் செய்யக் கூடாது. புதிய லட்சியங்களை நாம் உருவாக்க வேண்டும். நூறு வருடங்களுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய தொற்றினை நாம் எதிர்கொண்டோம் என மோடி பேசினார். அப்போது எதிர்க்கட்சியினர் அவரை பேச விடாமல் கூச்சலிட்டனர். அதற்கு பிரதமர் மோடி, நான் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

கிண்டல் செய்த பிரதமர்
அவர்களாகவே தலையில் குல்லாவை தூக்கிப் போட்டுக் கொள்கிறார்கள் என கிண்டல் செய்த பிரதமர், காங்கிரஸ் கட்சியினரின் செயல்பாடுகளால் நாடாளுமன்றம் இரண்டு ஆண்டுகள் முடங்கிப்போனது என விமர்சனம் செய்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் எம்பி ராகுல் காந்தி உரையாற்றினார்.

நான் தமிழன்தானே
அப்போது அவர் தமிழகத்தை பற்றி பேசினார். அவர் கூறுகையில் தமிழகத்தில் பாஜக ஒரு போதும் ஆட்சிக்கு வரவே முடியாது என்றார். மேலும் தமிழகம் நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்ட நிலையில் மத்திய அரசோ அவர்களை வெளியே செல்லுங்கள் என்கிறது என ராகுல் பேசினார். இதையடுத்து அவை முடிந்து வெளியே வந்த ராகுலிடம் தமிழகம் குறித்து நிறைய பேசினீர்களே அது ஏன் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் நான் தமிழன்தானே என்றார். மக்களவையில் ராகுல்காந்தி பேசிய பேச்சுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்திற்கு ஆதரவான பேச்சை முதல்வர் ஸ்டாலின் வரவேற்று ராகுலுக்கு பாராட்டையும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications