வெளிநாடுகளில் திருமணம் வைப்பது அவசியமா? பணக்கார குடும்பங்களுக்கு மோடி அட்வைஸ்! காரணம் இதுதான்
டெல்லி: சமீப காலமாக, சில குடும்பங்கள் வெளிநாடு சென்று திருமணங்களை நடத்தும் ட்ரெண்ட் உருவாகி வருகிறது. இது தேவையா? மக்கள் தங்கள் திருமண விழாக்களை இந்திய மண்ணில் நடத்தினால், நாட்டின் பணம் நம் நாட்டிலேயே இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலமாக வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இன்று பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி மூலமாக இன்று பேசினார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி பேசினார். குறிப்பாக டிஜிட்டல் பரிவர்த்தனை குறித்து பேசினார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி பேசுகையில், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் உள்நாட்டு பொருட்கள் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் ஆகியுள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்கு டிஜிட்டல் பரிவர்த்தனை மட்டுமே மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து, பெரும் பணக்காரர்கள் தங்கள் குடும்ப திருமணங்களை வெளிநாட்டில் வைப்பது குறித்து பேசிய பிரதமர் மோடி இது அவசியமா? எனவும் கேட்டார்.
தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:- திருமண சீசன் தொடங்கிவிட்டது. இந்த திருமண சீசனில் 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்கும் என்று சில வர்த்தக அமைப்புகள் மதிப்பிட்டுள்ளன. திருமணத்திற்கு பொருட்களை வாங்கும் போது அனைவரும் உள்ளூர் பொருட்களுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
திருமணம் என்ற தலைப்பில் பேசியதால் நான் இந்த விஷயத்தை சொல்கிறேன். எனக்கு நீண்ட காலமாக ஒரு விஷயம் வருத்தத்தை அளிக்கிறது. என் மனதில் இருக்கும் இந்த வலியை என் குடும்ப உறுப்பினர்களிடம் நான் வெளிப்படுத்தவில்லை என்றால், நான் அதை வேறு யாரிடம் பகிர்ந்து கொள்வது? கொஞ்சம் யோசித்து பாருங்கள். சமீப காலமாக, சில குடும்பங்கள் வெளிநாடு சென்று திருமணங்களை நடத்தும் ட்ரெண்ட் உருவாகி வருகிறது.
இது தேவையா? மக்கள் தங்கள் திருமண விழாக்களை இந்திய மண்ணில் நடத்தினால், நாட்டின் பணம் நம் நாட்டிலேயே இருக்கும். இந்தியாவில் திருமணத்தை நடத்துவதால் நம் நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். உங்கள் திருமணத்தைப் பற்றி ஏழைகள் கூட தங்கள் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்வார்கள். உள்ளூர் பொருள்களுக்கு ஆதரவு தருவதை உங்களால் இன்னும் விரிவுபடுத்த முடியும்.
நம் நாட்டில் ஏன் இதுபோன்ற திருமண விழாக்களை நடத்தக்கூடாது? நீங்கள் விரும்பும் சிஸ்டம் இன்று இல்லாமல் இருக்கலாம். ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் போது இந்த சிஸ்டம் மேம்படும். நான் பெரிய பணக்கார குடும்பங்களை பற்றி பேசுகிறேன். என்னுடைய இந்த வலி நிச்சயம் அந்த பெரிய குடும்பங்களை சென்றடையும் என்று நம்புகிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications