ஊழல் முதல் தீவிரவாதம் வரை.. 2014க்கு முன்பு இந்தியர்கள் தன்னம்பிக்கை இழந்து இருந்தனர்- பிரதமர் மோடி
டெல்லி: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதங்களுக்குப் பதிலளித்து பிரதமர் மோடி லோக்சபாவில் உரையாற்றினார்.. பிரதமர் மோடி பேசும் போது எதிர்க்கட்சிகள் முழக்கமிட்ட நிலையில், அதையும் தாண்டி தொடர்ந்து பேசி வருகிறார். வாக்கு வங்கி அரசியல் இத்தனை காலம் நாட்டை சீர்குலைத்ததாக தெரிவித்த அவர், பொதுமக்கள் மதச்சார்பின்மைக்கு இப்போது வாக்களித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
18ஆவது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் இப்போது நடந்து வருகிறது. கடந்த ஜூன் 27ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

லோக்சபா: அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்து வருகிறது. நேற்று லோக்சபாவில் ராகுல் காந்தியும், ராஜ்யசபாவில் கார்கேவும் இது தொடர்பாகப் பேசினர். லோக்சபாவில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி மற்றும் பாஜகவைக் கடுமையாக விமர்சித்தார் ராகுல் காந்தி. ராகுல் காந்தி பேசும் போது பிரதமர் மோடி தொடங்கி மத்திய அமைச்சர்கள் பலரும் அவரை குறுக்கிட்டுப் பேசினர்.
மோடி: இதற்கிடையே இன்று லோக்சபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்குப் பிரதமர் மோடி பதிலளித்துப் பேசினார்.. இருப்பினும், பிரதமர் மோடி பேசத் தொடங்கியதும் எதிர்க்கட்சிகளின் முழக்கமிடத் தொடங்கினர். மணிப்பூர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துப் பேசுமாறு முழக்கமிட்டனர். இதனால் பிரதமர் மோடி சில நிமிடங்கள் தனது பேச்சை நிறுத்திய நிலையில், பின்னர் எதிர்க்கட்சிகளின் முழக்கத்துக்கு இடையே தொடர்ந்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "இத்தனை காலம் வாக்கு வங்கி அரசியல் செய்தார்கள். அந்த வாக்கு வங்கி அரசியல் தேசத்தைச் சீர்குலைத்துவிட்டது. ஆனால், அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்குமான வளர்ச்சி என்பதே எங்கள் தாரக மந்திரம்.. மக்களின் சிறப்பான தேர்வால் நாங்கள் 3ஆவது முறையாகச் சேவை செய்ய உங்கள் முன் நிற்கிறோம். மதச்சார்பின்மைக்கே மக்கள் வாக்களித்துள்ளனர்.
சர்வதேச அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது ஊழலுக்கு எதிரான எந்தவொரு பாரபட்சம் இல்லாத நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த கொள்கையால் தான் மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர வைத்துள்ளனர்.. வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான நோக்கத்தைப் பூர்த்தி செய்துள்ளோம்.
2014க்கு முன்பு நாட்டில் ஊழலே அதிகமாக இருந்தது. அப்போது இந்தியர்கள் தன்னம்பிக்கை இழந்துவிட்டனர்.. காங்கிரஸ் ஆட்சியில் ஒரு ஊழலை மறைக்க மற்றொரு ஊழல் நடந்தது. ஆனால், அதன் பிறகு இந்தியாவின் ஊழல் அரசுகள் ஒழிக்கப்பட்டன. செயல்படுத்த முடியாத அனைத்தையும் நாங்கள் நிகழ்த்திக் காட்டியுள்ளோம். அதேபோல 2014க்கு முன்பு நமது நாட்டில் தீவிரவாத செயல்கள் அதிகமாக இருந்தது." என்று அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications