"திமுக ஒரு ஊழல் கட்சி.." திடீரென அட்டாக் மோடில் இறங்கிய பிரதமர்.. வேறு என்னவெல்லாம் சொன்னார்
டெல்லி: அந்தமானில் போர்ட் பிளேயர் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் கூட்டம் குறித்து கடுமையாகச் சாடினார். குறிப்பாகப் பிரதமர் மோடி திமுகவைத் தனது உரையில் கடுமையாக விமர்சித்தார்.
இந்தியாவுக்குச் சொந்தமான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக போர்ட் பிளேயர் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் இன்று திறக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஏர்போர்ட்டை திறந்து வைத்துப் பேசிய பிரதமர் மோடி, பெங்களூரில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டம் குறித்து மிகக் கடுமையாக விமர்சித்தார்.
புதிய முனையம்: சுமார் ₹ 710 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த புதிய முனையம் விமான போக்குவரத்தை அதிகரிக்க மிகப் பெரியளவில் அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 40,800 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட புதிய முனையக் கட்டிடம் ஆண்டுக்கு 50 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். வீர் சாவர்க்கர் விமான நிலைய முனையத்தைத் திறந்து வைத்துப் பேசிய அவர் எதிர்க்கட்சிகள் கூட்டத்தைக் கடுமையாக விமர்சித்தார்.
எதிர்க்கட்சிகள் தங்களின் தனிப்பட்ட ஆதாயங்களில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றன என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, பெங்களூருவில் ஊழல்வாதிகளின் கூட்டம் நடைபெற உள்ளது என்றும் சாடினார். தொடர்ந்து பேசிய அவர், "பெங்களூரில் ஊழல்வாதிகள் அனைவரும் சேர்ந்து ஒரு கூட்டத்தைப் போட்டுள்ளனர். அவர்களுக்கு அவர்களின் சொந்த குடும்பத்தினரின் நலன் தான் முக்கியம்.. நாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள்.
திமுக மீது அட்டாக்: ஜனநாயகம் என்பது மக்களுக்காக மக்கள் மூலம் நடத்தப்படுவது. ஆனால், அரசு என்பது குடும்பத்திற்காக குடும்பம் மூலம் நடத்தப்படுவது என்பதே இவர்களின் முழக்கம். ஊழல்வாதிகளைப் பாதுகாக்க இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைகின்றன.. அவர்களுக்கு குடும்பம் தான் முதன்மையானது, தேசம் ஒன்றும் இல்லை.
ஊழல்தான் அவர்களின் உந்துதலாக உள்ளது. பெரிய ஊழல், அதிக ஊழல் நபருக்கு மீட்டிங்கில் முக்கியத்துவம் தருவார்கள். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.. தமிழகத்தில் ஊழல் வழக்குகள் இருந்தபோதிலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் திமுகவுக்கு நற்சான்றிதழை கொடுத்துள்ள" என்று அவர் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
எதிர்க்கட்சிகள் கூட்டம்: 2024 பொதுத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது தொடர்பாக வியூகம் அமைக்க பல்வேறு எதிர்க்கட்சிகள் பெங்களூரில் கூடியுள்ளன. சோனியா காந்தியும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள நிலையில், இந்த நேரத்தில் பிரதமர் மோடி எதிர்க்கட்சி கூட்டத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பெங்களூர் ஆலோசனைக் கூட்டத்தை ஊழல்வாதிகளின் கூட்டம் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, பழைய அரசின் தவறுகளை எல்லாம் தனது அரசு திருத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அவர், "கடந்த 9 ஆண்டுகளில், நாங்கள் பழைய அரசின் தவறுகளை மட்டும் சரி செய்யாமல், மக்களுக்கு புதிய திட்டங்களையும் கொண்டு வந்துள்ளோம். இன்று, இந்தியாவில் ஒரு புதிய மாடல் வளர்ச்சி இருக்கிறது. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இது இருக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications