தமிழகத்தில் வாட் வரியை குறைக்காததால் பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. பிரதமர் மோடி விமர்சனம்
டெல்லி: தமிழகத்தில் எரிப்பொருள் மீதான வாட் வரியை குறைக்கவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நான் யாரையும் விமர்சிக்கவில்லை, ஆனால் தயவு செய்து வாட் வரியை குறையுங்கள் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே சுகாதார உள்கட்டமைப்பு மேம்படும்.

வாட் வரி
உலகில் போர் போன்று ஒரு சூழல் நிலவி வரும் நிலையில் ஒத்துழைப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். எரிப்பொருள் மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. ஆனால் மாநில அரசுகளில் சில அரசுகள் எரிப்பொருள் மீதான வாட் வரியை குறைக்கவில்லை. இதனால்தான் அந்த மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது.

விலையுயர்வு
இந்த விலையுயர்வு மக்களை பாதிக்கிறது. நான் யாரையும் விமர்சிக்கவில்லை. ஆனால் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கேரளா, ஜார்க்கண்ட், தமிழகம் ஆகிய மாநிலங்கள் வாட் வரியை குறைத்து மாநில மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

வாட் வரி குறையுங்கள்
தேச நலனுக்காக மக்கள் நலனுக்காக வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டுகிறேன். நடந்து போனதை விட்டுவிடுங்கள். ஆனால் இப்போது ஒத்துழைப்பு தாருங்கள். மேலும் கொரோனா குறித்து அவர் கூறுகையில் நோய் தொற்றை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

புதிய வியூகம்
கொரோனா பரிசோதனை, கொரோனா நோயாளிகளை கண்டறிவதில் புதிய வியூகத்தை அமல்படுத்த வேண்டும். இன்ப்ளூயன்ஸா உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு 100சதவீதம் ஆர்பிடிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மோடி தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி வாட் விவகாரத்தில் குற்றம்சாட்டியுள்ளார். இதன் மூலம் பெட்ரோல் டீசல் விலையுயர்வு குறித்துமுதல்முறையாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications