தேர்தல்கள் வரும் போகும்.. ஆனால் பட்ஜெட்தான் ஒட்டுமொத்த ஆண்டுக்கான வரைப்படம்.. பிரதமர் நரேந்திர மோடி
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அனைத்து பிரச்சினைகளையும் திறந்த மனதுடன் விவாதிக்க தயார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அது போல் இந்த ஆண்டும் பட்ஜெட் நாளை தாக்கலாகிறது. இதற்காக இன்றைய தினம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது.
இந்த கூட்டத் தொடர் இன்று முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரையும் பின்பு மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையும் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கியது.

பிரதமர் மோடி
இந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அனைத்து எம்பிக்களையும் இந்த பட்ஜெட் கூட்டத் தொடருக்கு வரவேற்கிறேன். இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் இது ஒரு முக்கியமான நேரம்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றத்தில் அனைத்து விவகாரங்களையும் விவாதிக்க மத்திய அரசு திறந்த மனதுடன் உள்ளது. ஆக்கப்பூர்வமான விவாதங்களை எம்பிக்கள் முன்னெடுக்க வேண்டும். நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல உதவ வேண்டும். நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைய முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. நாட்டின் பொருளாதார முன்னேற்றம், தடுப்பூசி திட்டம் உள்ளிட்டவை உலக நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது.

5 மாநில சட்டசபை தேர்தல்
பட்ஜெட் அறிக்கை உலகளாவிய அளவில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும். 5 மாநில சட்டசபை தேர்தல் பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை நடைபெறுகிறது. இவ்வாறு அடிக்கடி தேர்தல் நடைபெறுவது நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் விவாதங்களையும் பாதிக்கிறது என்பது உண்மைதான். ஆனால் தேர்தல்கள் வரும் போகும். ஆனால் பட்ஜெட் ஆண்டு முழுவதும் அரசின் செயல்பாட்டிற்கான திட்டத்தை காட்டுகிறது என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

கேள்வி நேரம் இல்லை
ராஜ்யசபா காலை 10 மணி முதல் 3 மணி வரையும் லோக்சபா மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் கூடுகிறது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் இரண்டு நாட்களில் பூஜ்ய நேரமும் கேள்வி நேரமும் இரு அவைகளிலும் நடத்தப்படாது. பெகாசஸ் விவகாரம் குறித்து இந்த கூட்டத் தொடரில் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications