நாடாளுமன்றத்தில் விவாதங்களை எதிர்கொள்ள பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை- ராகுல் காந்தி கடும் தாக்கு
டெல்லி: நாடாளுமன்றத்தில் விவாதங்களை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாதவர் பிரதமர் மோடி என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் லோக்சபா, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிகளுக்கு இடையே விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இரு சபைகளிலும் இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.
சூர்யா வீட்டு வாசல்ல நிற்பதும் போலீஸ்தான்.. மாஜி அதிகாரி வீடியோவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் சப்போர்ட்
விவாதமின்றி நிறைவேற்றம்
ஆனால் இம்மசோதாக்கள், விவாதம் நடத்தப்படாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. ஏற்கனவே டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியின்படி மத்திய அரசு, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவை நிறைவேற்றிவிட்டது.
எதிர்க்கட்சிகள் கோரிக்கை என்ன?
இருந்தபோதும் விவசாயிகளின் போராட்டத்தின் போது 700க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்; அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்; விளைபொருட்களுக்கான ஆதார விலையை நிர்ணயிக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்; லக்கிம்பூரில் விவசாயிகள் கார் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டதற்கு மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் ஆகியவை குறித்து விவாதித்தாக வேண்டும் என்பதை வலியுறுத்தியே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று நாடாளுமன்றத்தின் இருசபைகளிலும் அமளியில் ஈடுபட்டன. இதனை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.
ராகுல் பிரஸ் மீட்
இந்நிலையில் லோக்சபா நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டில் 700 விவசாயிகள் உயிரிழந்ததற்கு யார் காரணம்? யார் பொறுப்பேற்பது? அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல்களை மனதில் வைத்துதான் மத்திய அரசு 3 விவசாய சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதாவை நிறைவேற்றி உள்ளது. மக்களின் ஒன்றுபட்ட வலிமைக்கு மத்திய பாஜக அரசால் முகம் கொடுக்க முடியவில்லை.
மோடிக்கு தைரியம் இல்லை
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களும் நிச்சயம் வாபஸ் பெறப்படும் என்றே கூறிவந்தோம். நாங்கள் கூறியதுதான் இப்போது நடந்துள்ளது. விவசாய சட்டங்களை நிறைவேற்றும் போதும் விவாதம் இல்லை; இப்போது திரும்பப் பெறும் போதும் விவாதம் நடத்தப்படவில்லை. நாடாளுமன்ற விவாதங்களை எதிர்கொள்கிற தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.