15 மாதங்களுக்கு பின்.. முதல் வெளிநாட்டு பயணம்.. வங்கதேசம் புறப்பட்டார் பிரதமர் மோடி!
டெல்லி: 2 நாள் பயணமாக பிரதமர் மோடி வங்கதேசத்திற்கு இன்று சென்றுள்ளார்.
கொரோனா பரவலுக்கு பின் பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் எதையும் ஏற்கொள்ளவில்லை. பாதுகாப்பு கருதியும், லாக்டவுன் காரணமாகவும் பிரதமர் மோடி வெளிநாடுகள் எதற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் கொரோனா பரவலுக்கு பின் பிரதமர் மோடி முதல் வெளிநாட்டு பயணத்தை இன்று மேற்கொள்கிறார்.
சரியாக 15 மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். வங்கதேசம் சென்ற அவர் 2 நாட்கள் அங்கு வசிப்பார். இன்று வங்கதேசத்தின் சுதந்திர தினம் ஆகும்.
அந்நாட்டு சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளும்படி வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்த நிலையில் பிரதமர் மோடி சென்றுள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது அதிலும் இந்தியாவிற்கு நெருக்கமாக இருக்கும் நாட்டுடன் பயணம் மேற்கொள்வது சந்தோசம் தருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா வழங்கும் அமைதிக்கான காந்தி விருது வங்கதேசத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மறைந்த பிரதமர் ஷேக் முஜிப் ஊர் ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டது. இவர் வங்கதேசத்தின் பிரதமர் மற்றும் அதிபராக இருந்தவர்.
இவருக்கு விருது வழங்கியதற்கு ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்த நிலையில் தற்போது பிரதமர் மோடி வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.