புதிய கவுரவம்.. ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை பெறுகிறார் பிரதமர் மோடி- இந்தோனேசியா பயணம்
டெல்லி: இந்தோனேசியாவில் நடைபெறும் 17-வது ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கு பிரதமர் மோடி பாலி நகரத்துக்கு செல்கிறார்.
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அழைப்பின் பேரில் 17வது G20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 14 முதல் 16 வரை இந்தோனேசியாவின் பாலி நகருக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

பாலி மாநாடு
பாலி உச்சிமாநாட்டின் போது, "ஒன்றாக மீள்வோம், வலுவாக மீள்வோம்" என்ற கருப்பொருளின் கீழ் உலகளாவிய முக்கிய பிரச்சினைகள் குறித்து G20 தலைவர்கள் விரிவாக ஆலோசிப்பார்கள். G20 உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு; சுகாதாரம்; டிஜிட்டல் பரிமாற்றம் என மூன்று அமர்வுகள் நடைபெறும்.

தலைவராகும் இந்தியா
உச்சிமாநாட்டின் நிறைவு அமர்வில், அதிபர் விடோடோ, ஜி20 தலைவர் பதவியை பிரதமர் நரேந்திர மோடியிடம் அடையாளபூர்வமாக ஒப்படைப்பார். 2022 டிசம்பர் 1 முதல் G20 தலைவர் பதவியை இந்தியா முறைப்படியாக ஏற்கும். உச்சிமாநாட்டிற்கிடையே, பிரதமர் மோடி மற்ற நாடுகளின் பிரதமர்கள் சிலருடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார். பாலியில் உள்ள இந்திய சமூகத்தினருடனும் பிரதமர் உரையாற்றுவார்.

தாமரையுடனான லச்சினை
ஜி20 தலைமை பொறுப்பை நமது இந்தியா ஏற்கும் நிலையில் அதன் லோகோ, கருப்பொருள் ஆகியவற்றை பிரதமர் மோடி வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், 20 இலச்சினை என்பது வெறும் இலச்சினை. இது ஒரு செய்தி, இந்தியாவின் நரம்புகளில் ஓடும் உணர்வு. வாசுதைவ குடும்பகம்-உலகமே ஒரே குடும்பம் என்பது நம் எண்ணங்களில் எங்றும் நிறைந்திருக்கும் ஒரு தீர்மானம். உலகளாவிய சகோதரத்துவத்தின் சிந்தனை ஜி-20 இலச்சினை மூலம் பிரதிபலிக்கிறது. இலச்சினையில் உள்ள தாமரை இந்தியாவின் பண்டைய பாரம்பரியம், நம்பிக்கை மற்றும் சிந்தனையை குறிக்கிறது. அத்வைத்தின் தத்துவம், அனைத்து உயிரினங்களின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது. இந்த தத்துவம் இன்றைய மோதல்களைத் தீர்க்கும் ஊடகமாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.

ஜி20-ல் தாமரை ஏன்?
மேலும் ஜி-20 இலச்சினையில் உள்ள தாமரை இது போன்ற கடினமான காலங்களில் நம்பிக்கையின் சின்னமாக உள்ளது. உலகம் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தாலும், அதை சிறந்த இடமாக மாற்ற நாம் முன்னேற முடியும். இந்தியாவின் அறிவு மற்றும் செழுமையின் இரு தெய்வங்களும் தாமரையின் மீது அமர்ந்திருக்கிறது. G-20 இலச்சினையில் தாமரையின் மீது பூமி வைக்கப்பட்டுள்ளது. தாமரையின் ஏழு இதழ்களின் முக்கியத்துவம் என்னவெனில் ஏழு கண்டங்களையும், ஏழு உலகளாவிய இசைக் குறிப்புகளையும் குறிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஏழு இசைக் குறிப்புகள் ஒன்றாக இணைந்தால், அவை சரியான இணக்கத்தை உருவாக்குகின்றன எனவும் கூறியிருந்தார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications