2047-க்குள் வளர்ச்சி அடைந்த பாரதம்.. 140 கோடி இந்திய மக்களின் கனவு.. செங்கோட்டையில் முழங்கிய மோடி
டெல்லி: இந்தியாவின் 78-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் இன்று காலை 7.30 மணிக்கு பிரதமர் மோடி மூவர்ணக் கொடி ஏற்றினார்.தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, 40 கோடி இந்தியர்கள் இணைந்து சுதந்திரத்தை பெற்று தந்தனர். தற்போது 140 கோடி மக்கள் இணைந்து இந்தியாவை வளர்ச்சி நாடாக மாற்ற போராடுவோம். இந்து தான் 140 கோடி மக்களின் கனவு என பேசினார்.
இந்தியாவின் 78-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசு அலுவலங்கள் மின்னொளியில் ஜொலிக்கின்றன. சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் இன்று காலை 7.30 மணிக்கு பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றினார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து பூக்கள் தூவப்பட்டன. தொடர்ந்து பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றினார்.

பிரதமர் மோடி கூறியதாவது:- நாட்டுக்காக இன்னுயிர் தந்தவர்களை இந்த நேரத்தில் போற்றுகிறேன்.விவசாயிகளும், ராணுவ வீரர்களும் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளனர். நாட்டுக்காக தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடன் பட்டுள்ளோம். நாட்டு மக்களும் நம் பாரதத்திற்காக தங்களை அர்ப்பணித்து கொள்ள வேண்டும். உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியா மாற வேண்டும்.
சுதந்திர போராட்ட வீரர்களை போலவே நாமும் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். 40 கோடி மக்கள் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து சுதந்திரம் பெற்றனர். தற்போது 140 கோடி மக்கள் இருக்கும் நிலையில் நாட்டின் வலிமை வளர்ச்சி அடைந்துள்ளது. 2047 ஆம் ஆண்டில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக முடியும். 140 கோடி மக்களின் கனவும் இது தான். 140 கோடி மக்களும் இணைந்து நாட்டை 2047க்குள் வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற வேண்டும்.
பல்வேறு துறைகளில் நாம் வளர்ச்சி கண்டுள்ளோம். ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 15 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள சுய உதவிக்குழுக்களில் 10 கோடி பெண்கள் உள்ளனர். சுற்றுலா, கல்வி, சுகாதார துறைகள் நவீனமாக்கப்பட்டு உள்ளன. நிதித்துறையில் சீர் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. சாலையோர வியாபாரிகளுக்கு நிதி உதவி உள்ளிட்ட திட்டங்களால் பொருளாதாராம் பலம் பெறுகிறது.
கொரோனா காலத்தில் மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது. நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. வயநாடு சம்பவம் துயரமளிக்கிறது. இவ்வாறு மோடி பேசினார்.
செங்கோட்டையில் பிரதமர் மோடி சுதந்திர தின கொடி ஏற்றுவது 11-வது முறையாகும். இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா, 'விக்சித் பாரத்' என்ற சிந்தனையோடு கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின விழா முழு ஒத்திகை நிகழ்ச்சி டெல்லி செங்கோட்டையில் நேற்று முன் தினம் நடைபெற்றது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றியதும், ஹெலிகாப்டரில் இருந்து பூக்கள் தூவப்பட்டது.
சுதந்திர தினவிழாவில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி என அதிமுக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால், டெல்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு உள்ளதால், பாதுகாப்பில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உளவுப்பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தலைநகரில் மட்டும் பாதுகாப்பு பணிக்காக 3,500 போக்குவரத்து போலீசார், 10 ஆயிரம் டெல்லி போலீசார் ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டை முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவப்படையினர், டெல்லி போலீசார் என தீவிர கண்காணிப்பு உள்ளது. செங்கோட்டையைச் சுற்றியுள்ள சாலைகள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாடில் கொண்டு வரப்பட்டு உள்ளது.
கண்காணிப்பு கேமராக்கள் அதிகளவில் நிறுவப்பட்டு உள்ளன. செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் 700 இடங்களில் பொருத்தப்பட்டு உள்ளது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், முக்கிய பேருந்து நிலையங்களில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications