நாளை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.. தடைகளை கடந்து ஏற்பாடுகள் தீவிரம்!
டெல்லி : புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா காண கோலாகலமாக தயாராகி வருகிறது. நாளை பிரதமர் மோடி நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். திறப்பு விழாவின் போது நாடாளுமன்றத்திற்குள் செங்கோலை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.
தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 1927ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்தப் பழமையான கட்டத்தின் பாதுகாப்பு குறைபாடு, இடவசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற நிகழ்வுகளை நடத்த புதிய கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து, புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்துக்கு பிரதமர் மோடி 2020, டிசம்பர் 10ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். 970 கோடி ரூபாய் செலவில் நான்கு மாடிகொண்ட முக்கோண வடிவிலான கட்டடமாக சென்ட்ரல் விஸ்டா' என்ற பெயரில் புதிய நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் சுமார் 888 பேர் வரையும் , மாநிலங்களவையில் 300-க்கும் அதிகமான பேர் அமரும் வகையிலும், இரு அவைகளும் பங்கேற்கும் கூட்டு கூட்டத்தின்போது 1,280 உறுப்பினர்கள் வரை அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி, நாளை திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க கூடாது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
'மரபை மீறி, நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காமல், பிரதமர் மோடியே திறந்துவைப்பது அவமானம், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்' எனக் கண்டனம் தெரிவித்து 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இதற்கிடையே கன்னியாகுமரியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெய்சுகின் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பதற்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்காதது அவரது மதிப்பை குறைப்பது மட்டுமின்றி அரசமைப்பு சட்டத்தையும் மீறுவதாக உள்ளது. எனவே, புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதியை கொண்டு திறக்க மக்களவை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி, பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது இதுபோன்ற மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவைத் தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறக்க எந்த தடையும் இல்லை.
இதனால், புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். அத்துடன், சுதந்திரத்தின் போது ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக பிரிட்டிஷாரிடம் இருந்து நேரு பெற்றுக் கொண்ட செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்பட உள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவையடுத்து நாடாளுமன்றம் அமைந்துள்ள சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து டெல்லி காவல்துறையின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள சாலைகளில் தடுப்புகள் அமைப்பது, டெல்லி எல்லைப் பகுதியில் வாகன சோதனை சாவடிகளை அமைப்பது, கூடுதல் காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பாக முழுமையாக ஆலோசிக்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications