10 நாளில் 4 முறை.. நெருங்கும் உ.பி.தேர்தல்.. அடுத்தடுத்து "ட்ரிப்" போடும் பிரதமர் மோடி.. சூடான களம்
டெல்லி: உத்திரபிரதேச மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி 28ஆம் தேதிக்குள் அடுத்தடுத்து உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு சென்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 2022ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அங்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பதவி ஏற்று ஆட்சி நிறைவடையும் தருவாயில் மக்கள் அரசுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே உத்திரப்பிரதேசத்தில் மோடி அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
பாஜக போலவே காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரக் களத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடிக்கு சமமாக காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி ஆகியோரும் களத்தில் முன்னணியில் இருக்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேசத்தில் சில காலமாக மாநிலத்தின் அரசியல் களத்தில் தீவிரமாக பங்காற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வாரணாசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், நேற்று ஷாஜஹான்பூரில் கங்கா விரைவுச் சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் லட்சிய திட்டமான கங்கா எக்ஸ்பிரஸ்வே ஆறு வழிச்சாலையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து சுற்றுப்பயணம்
மீரட்டில் உள்ள பிஜோலியில் தொடங்கி ஹாபூர், புலந்த்ஷாஹர், அம்ரோஹா, சம்பல், படவுன், ஷாஜஹான்பூர், ஹர்தோய், உன்னாவ், ரேபரேலி, பிரதாப்கர் வழியாக பிரயாக்ராஜில் உள்ள ஜூடாபூரில் முடிவடையும் 594 கி.மீ. கிலோ மீட்டர் தூரம் உள்ள பகுதிகளை இணைக்கிறது. இந்த நிலையில் டிசம்பர் 28-ஆம் தேதிக்குள் பிரதமர் மோடி மீண்டும் மூன்று முறை உத்தரப்பிரதேசம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டிசம்பர் 21ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் காசிக்கு செல்லலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

காசியில் மீண்டும் பிரதமர்
ஆனால் எந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறித்து இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. தற்போது கிடைத்துள்ள தகவல் இதன்படி பிரயாக்ராஜில் நடைபெறவுள்ளநிகழ்ச்சிக்கு இரண்டரை லட்சம் பெண்கள் அழைக்கப்பட்டுள்னர் என தெரிய வந்துள்ளது. டிசம்பர் 23-ஆம் தேதி மீண்டும் காசிக்கு பிரதமர் சொல்கிறார். இங்கு லஹர்தர முதல் மோகன்சராய் வரையிலான நான்கு வழிச்சாலைகள் மற்றும் 6 வார்டுகளில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசியல் முக்கியத்துவம்
அதே நாளில் காசி மக்களுக்கு 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள மதிப்புள்ள நலத்திட்டங்களை தொடங்குவார் என்றும், டிசம்பர் இருபத்தி எட்டாம் தேதி கான்பூரில் இருக்கும் மெட்ரோ நிலைய சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அடுத்தடுத்து மோடி உத்தரப்பிரதேசம் செல்வது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications