தூய்மை இந்தியா திட்டத்தை கிண்டல் செய்தனர்! ஆனால் குப்பைகளை விற்று அரசுக்கு ரூ.2300 கோடி லாபம்- மோடி
டெல்லி: இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளித்து பிரதமர் மோடி லோக்சபாவில் பேசினார். தனது அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்ட அவர், தூய்மையான இந்தியா திட்டத்தின் மூலம் அரசுக்கு 2300 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார். மேலும், நாட்டை இளைஞர்களுக்கு ஏற்ற ஒரு நாடாக மாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தாண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையுடன் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதங்கள் நடைபெற்ற நிலையில், பிரதமர் மோடி இன்று அதற்குப் பதிலளித்துப் பேசினார். கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு கொண்டு வந்த திட்டங்களைப் பிரதமர் மோடி பட்டியலிட்டுப் பேசினார்.
பிரதமர் மோடி:
இதற்கிடையே பிரதமர் மோடி மேலும் பேசுகையில், "சமீபத்தில் உலக சுகாதார அமைப்பிடம் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. அதில் குழாயிலிருந்து சுத்தமான நீர் கிடைப்பதால், நோய்ப் பாதிப்பு குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் நோய்களுக்கு செலவழிக்க வேண்டிய ரூ.40,000 சேமிக்கப்படுகிறது. இது போன்ற பல திட்டங்கள் மக்களின் சேமிப்பை அதிகரிக்க உதவியுள்ளன.
நம் அதிகாரம் சேவையாக மாறும்போது, அது தேசத்தைக் கட்டியெழுப்ப உதவுகிறது. அதேநேரம் அதிகாரம் பரம்பரைச் சொத்தாக மாறும்போது, ஜனநாயகம் முடிவடைகிறது. அரசியலமைப்புச் சட்டத்தை நாம் பின்பற்றி நாட்டின் ஒற்றுமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். இதை உணர்த்தும் விதமாகவே சர்தார் வல்லபாய் படேல் சிலையை உலகின் மிகப் பெரிய சிலையாக உருவாக்கினோம்.
அரசியல் லாபத்தை கருதவில்லை:
அரசியல் லாபம், நஷ்டம் என்றெல்லாம் கவலைப்படாமல் போலி பயனாளர்களை நலத்திட்டங்களில் இருந்து நீக்கியுள்ளோம். முந்தைய அரசுகள் அரசியல் கணக்குப் போட்டு இவர்களை நீக்காமல் வைத்திருந்தார்கள். ஆனால், பாஜக அரசு எடுத்த துணிச்சலான நடவடிக்கை மூலம் 10 கோடி போலிப் பயனாளிகளை நீக்கி இருக்கிறோம்...
ஸ்வச் பாரத் மூலம் லாபம் தான்:
ஸ்வச் பாரத், அதாவது தூய்மையான இந்தியா திட்டத்தை நாங்கள் கொண்டு வந்த போது அதைச் சிலர் கிண்டல் செய்தனர். ஆனால், அதில் கிடைத்த குப்பைகளை விற்றதன் மூலம் அரசுக்கு ரூ.2,300 கோடி கிடைத்தது. அந்தப் பணத்தையும் நாட்டின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்தியுள்ளோம். தேசத்தைக் கட்டியெழுப்ப மக்கள் ஒன்றிணைந்து செயற்படும்போது மாற்றம் தானாக நடக்கும். நமது நாட்டை இளைஞர்களுக்கு ஏற்ற நாடாக உருவாக்கி வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications