உ.பி. அரசில் மோதல் எதிரொலி: டெல்லியில் 2-வது நாளாக பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை!
டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா போர்க்கொடி தூக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பாஜக ஆளும் 13 மாநிலங்களின் முதல்வர்கள் மற்று 15 துணை முதல்வர்கள் கூட்டத்தை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி கூட்டினார். டெல்லியில் இன்று 2-வது நாளாக பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் மாநிலங்களில் ஜாதிய சமநிலை மற்றும் உட்கட்சி மோதல்களைத் தவிர்க்க முதல்வருடன் 2 துணை முதல்வர்களை நியமிப்பதை வழக்கமாக வைத்துள்ளது. 2017-ம் ஆண்டு உ.பி. சட்டசபை தேர்தலில் பாஜக வென்ற போது ஓபிசி வகுப்பைச் சேர்ந்த கேசவ் பிரசாத் மவுரியாதான் முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். ஆதரவுடன் ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக்கப்பட்டார். இதனால் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிராமணரான பிரஜேஷ் பாதக் ஆகியோர் துணை முதல்வர்களாக்கப்பட்டனர்.

இதனையடுத்து பாஜக வெற்றி பெறும் மாநிலங்களில் சலசலப்புகளைத் தவிர்க்க 2 துணை முதல்வர்களை நியமிப்பதை பாஜக கடைபிடித்து வருகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசத்திலும் இதே பார்முலாவை பாஜக செயல்படுத்தியது. அண்மையில் ஒடிஷாவில் ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக 2 துணை முதல்வர்களை நியமித்தது.
இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் உ.பி.யில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தது. இதனால் பாஜக டெல்லி மேலிடமும் பெரும் அதிர்ச்சியடைந்தது. தற்போது உ.பி.யில் 13 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தல் பின்னடைவு மற்றும் 13 தொகுதி இடைத்தேர்தல்களை முன்வைத்து முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா போர்க்கொடி தூக்கினார். இதனால் முதல்வர் யோகி ஆதித்யநாத் மாற்றப்படக் கூடும் என கூறப்பட்டு வருகிறது.
இந்த பின்னணியில் பாஜக ஆளும் 13 மாநிலங்களின் முதல்வர்கள், 15 துணை முதல்வர்களின் இரண்டு நாட்கள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில் மாநில முதல்வர்கள்- துணை முதல்வர்களிடையேயான கருத்து வேறுபாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. துணை முதல்வர்களுக்கு உரிய முக்கியத்துவம் தராமல் சில மாநில முதல்வர்கள் புறக்கணிப்பதாகவும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்தும் விவாதம் நடந்ததாக தெரிகிறது.
தங்களது மாநிலத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களை மாநில முதல்வர்கள் விவரித்தனர். மேலும் பாஜக ஆளும் மாநிலங்களின் கட்சி தலைமைகளுடனான இணக்கமான செயல்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று டெல்லியில் 2-வது நாளாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்திலும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரதமர் மோடி இன்று மன்கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளார். இந்த உரையை அனைத்து பாஜக ஆளும் மாநில முதல்வர்களும் கூட்ட அரங்கில் கேட்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications