லோக்சபாவில் பேசவிடாமல் முழக்கம் எழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு தண்ணீர் கொடுத்த பிரதமர் மோடி!
டெல்லி: லோக்சபாவில் பிரதமர் மோடி பேசிய போது அவருக்கு முன்னால் சபையின் மையப்பகுதியில் நின்று கொண்டு இடைவெளியே இல்லாமல் இந்தியா கூட்டணி எம்பிக்கள் தொடர்ச்சியாக முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது தமக்கு எதிராக முழக்கமிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் தாகம் தீர்க்க பிரதமர் மோடி தண்ணீர் கொடுத்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி இன்று பதிலளித்து பேசினார். பிரதமர் மோடி பேசத் தொடங்கியதில் இருந்து அவர் உரையை நிறைவு செய்யும் வரை இந்தியா கூட்டணி எம்பிக்கள் அவருக்கு முன்பாக சபையின் மையப் பகுதியில் நின்று இடைவிடாமல் முழக்கம் எழுப்பினர்.

மணிப்பூர் விவகாரம், நீட் முறைகேடுகள் விவகாரம் உள்ளிட்டவற்றை முன்வைத்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கமிட்டுக் கொண்டே இருந்தனர். தமிழக எம்பிக்கள், தமிழிலும் முழக்கமிட்டனர். அவ்வப்போது சபாநாயகர் ஓம் பிர்லா குறுக்கிட்டு கண்டித்துக் கொண்டிருந்தார்.
ஆனாலும் அசராத பிரதமர் மோடி காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி மிக கடுமையாகவே விமர்சித்து பேசினார். அப்போது ராகுல் காந்தி தமது இருக்கையில் அமர்ந்து உன்னிப்பாக கேட்டுக் கொண்டுதான் இருந்தார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ காட்சி பகிரப்பட்டு வருகிறது. அதில் பிரதமர் மோடி நின்று கொண்டிருக்கிறார்.. அவருக்கு தண்ணீர் கொடுக்கப்படுகிறது.. அந்த தண்ணீர் டம்ளரை தமக்கு முன்பாக சபையில் நின்று தமக்கு எதிராக முழக்கமிடும் எதிர்க்கட்சிகளின் எம்பிக்களுக்கு பிரதமர் மோடி கொடுக்கிறார்.. இந்த வீடியோ பதிவுதான் தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்படுகிறது.












Click it and Unblock the Notifications