பிரதமர் மோடி பயந்தாங்கொள்ளி.. ராகுல் காந்தி கடும் பாய்ச்சல்
டெல்லி: தேசிய பாதுகாப்பு குறித்து, என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறுபான்மையினர் பிரிவினருக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கலந்து கொண்டு பேசுகையில் மேலும் கூறியதாவது:
நாட்டின் அனைத்து இயக்கங்களிலும் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம் செலுத்திவருகிறது. அந்த அமைப்பின் முகமாக பிரதமர் மோடி இருந்து வருகிறார். மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் அனைத்து அமைப்புகளிலும் ஆர்எஸ்எஸ் தலையீடு உள்ளது. ஆனால் இந்த மாநிலங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், பல்வேறு அமைப்புகளை காப்பாற்றி உள்ளது.
மேலும், பல்வேறு அமைப்புகளில் வேலை செய்யும் ஆர்எஸ்எஸ் தொடர்புடையவர்கள் கண்டுபிடித்து நீக்கப்படுவார்கள். இந்தியாவில் அனைத்து மதங்களும் மொழிகளும் மதிக்கப்பட வேண்டும். பிற மதங்களை சேர்ந்தவர்கள் சமமாக நடத்த வேண்டும். ஆனால், பாஜக அரசு இந்தியாவை பிரித்துப் பார்க்கிறது.
தேசிய பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி என்னுடன் ஒரே மேடையில் 10 நிமிடங்கள் விவாதிக்க தயாரா? என்று சவால் விடுக்கிறேன். மோடிக்கு பயம் ஏற்பட்டுவிட்டது. முகத்தில் அது அப்பட்டமாக தெரிகிறது.
நாட்டைவிட நாங்கள் பெரியவர்கள் என பாஜக நினைக்கிறது. இன்னும் 3 மாதங்களில் நாடே உயர்ந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். லோக்சபா தேர்தலை பார்த்து பிரதமருக்கு பயம் ஏற்பட்டு உள்ளது. சீனாவுடன் டோக்லாமில் இந்தியா மோதல் போக்கிற்கு உள்ளானபோது, மோடி தைரியமற்றவர் என்பதை சீனாவும் புரிந்து கொண்டது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் முத்தலாக் சட்டத்தை வாபஸ் பெறுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.