ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியில்லை? "இந்த 2ல் ஒரு தொகுதியாமே! ஏன் திடீர்னு என்னாச்சு?
டெல்லி: ராமநாதபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுவதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது அந்த தொகுதியை விட்டுவிட்டு தமிழகத்தில் வேறு தொகுதியில் போட்டியிட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் வாரணாசி, வதோதரா ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் இரண்டிலும் வென்றாலும் வாரணாசி தொகுதியை மட்டும் வைத்துக் கொண்டார். பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் வென்றார்.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியே தொடர வேண்டும் என பாஜகவும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரும் விரும்புகிறார்கள். நீட் தேர்வு, பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பு, பெட்ரோல் டீசல் விலையுயர்வு, கேஸ் விலை உயர்வு, தங்கம் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவைகளுக்கு மத்தியில் 2024 ஆம் ஆண்டு ஆட்சிக் கட்டிலில் ஏற போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஆண்டை போலவே இந்த முறையும் இரு தொகுதிகளில் போட்டியிட பிரதமர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஒன்று வழக்கம் போல் வாரணாசி இன்னொன்று தமிழகத்தில் ராமநாதபுரம் தொகுதி ஆகியவற்றில் போட்டியிட பிரதமர் முடிவு செய்ததாக தெரிகிறது.
தமிழகத்தில் இருந்து கணிசமான எம்பிக்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்ல இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. ராகுல் காந்தி கடந்த முறை வயநாடு, அமேதி தொகுதிகளில் போட்டியிட்டார். அதாவது வட இந்தியா, தென்னிந்தியாவில் தலா ஒரு தொகுதிகளில் போட்டியிட்ட அவர் அமேதியில் தோல்வி அடைந்தாலும் வயநாட்டில் வென்றார். அது போல் பிரதமர் மோடியும் வடஇந்தியா, தென் இந்தியா என இரு தொகுதிகளில் போட்டியிடுவார் என்கிறார்கள்.
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் அறந்தாங்கி, திருச்சுழி, பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் 1951 ஆம் ஆண்டு முதல் கடந்த 2019ஆம் ஆண்டு வரை 17 எம்பி தேர்தல்கள் நடந்துள்ளன. அவற்றில் காங்கிரஸ் கட்சி 6 முறையும் அதிமுக 4 முறையும் திமுக மூன்று முறையும் தமாகா, பார்வார்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சுயேச்சை ஆகியவை தலா ஒரு முறை வென்றுள்ளன.
2004 ஆம் ஆண்டு முதல் பாஜகவுக்கு அந்த தொகுதியில் தோல்வியே நிலவி வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இந்திய முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனியிடம் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். நயினாரைவிட அமமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அதிக வாக்குகளை பெற்றார்.
இந்த முறை டிடிவி தினகரனும் ஓபிஎஸ்ஸும் இணைந்து தென் தமிழகத்தில் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க முனைப்பு காட்டி வருகிறார்கள். இவர்கள் அதிமுகவில் இல்லாததால் இந்த தொகுதியில் பிரதமர் போட்டியிட்டால் நிச்சயம் ஓபிஎஸ்+ டிடிவி தினகரன் கூட்டணிக்கு வாக்குகள் பிரியும். இதனால் தேர்தல் முடிவுகள் என்ன மாதிரியாக இருக்கும் என தெரியவில்லை.
குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாலும் அது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு வழிவகுக்கும் என்பதால் ராமநாதபுரத்தை கைவிட்டுவிட்டு கோவை அல்லது கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் ஒன்றில் பிரதமர் போட்டியிடுவார் என தெரிகிறது. கோவையில் ஏற்கெனவே பாஜகவுக்கு செல்வாக்கு இருக்கிறது. அது போல் கன்னியாகுமரியிலும் அக்கட்சிக்கு செல்வாக்கு இருப்பதால் அங்கு பிரதமரை போட்டியிட வைக்க யோசனை இருக்கிறதாம். எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால்தான் தெரியும்.












Click it and Unblock the Notifications