இதோ ஆரம்பிச்சுட்டாங்க.. மோடிதான் காரணம்! சந்திரயான் 3 வெற்றி குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
டெல்லி: சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்று இருக்கும் நிலையில், விண்வெளித் துறையில் இந்தியா படைத்து இருக்கும் இந்த சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி காரணம் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்து இருக்கிறார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில், இந்தியாவையும் சேர்க்கும் வகையிலான முயற்சியில் இறங்கியது இஸ்ரோ. மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது இஸ்ரோவால் சந்திராயன் 1 விண்கலம் நிலவிற்கு ஏவப்பட்டது.

நிலவில் இருந்து எடுத்து அனுப்பிய சந்திரயான் 1 விண்கலம் புகைப்படங்களின் மூலமாக நிலவில் நீர் இருக்கும் தடங்கள் தெரிந்தன. எப்படியாவது நிலவின் தென் துருவத்துக்கு சென்றுவிட வேண்டும் என அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் முயற்சி செய்துகொண்டு இருக்கும் நிலையில், முதல் நாடாக நிலவின் தென் துருவத்துக்கு விண்கலத்தை அனுப்பி சாதித்து உள்ளது இந்தியா.
கடந்த 2019 ஆம் ஆண்டு 2 வது முறையாக சந்திராயன் 2 விண்கலத்தை நிலவுக்கு இஸ்ரோ அனுப்பியது. ஆனால் ரோவர் கருவி நிலவில் தரையிறங்கும் சமயத்தில் வேகமாக மோதி வெடித்தது. ஆனாலும் தொடர்ந்து அதன் ஆர்ப்பிட்டர் நிலவிலேயே இயங்கி இஸ்ரோவுக்கு பல்வேறு தகவல்களை அனுப்பி வருகிறது. சந்திரயான் 3 திட்டத்துக்கு அதுவே உதவியது.
அதை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் கடந்த 23 ஆம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. இந்த சரித்திர சாதனையை படைத்த உடனே இதற்கு காரணம் யார் என்ற விவாதங்களும் சமூக வலைதளங்களில் வெடித்தன.
இந்த நிலையில் இஸ்ரோவை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அமைச்சர் ஜிதேந்திர சிங், தனியார் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விண்வெளி ஆராய்ச்சி குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், "சந்திரயான் 3 இன் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையை தொடும்போது எனக்கு பெரும் திருப்தியாக இருந்தது.
இந்த பணியின்போது இஸ்ரோ குழுவினருடன் இணைந்து செயல்பட்ட அனைவருமே மிகுந்த பதற்றத்தில் இருந்தோம். சந்திரயான் 3 விண்கலம் பூமியின் சுற்று வட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து பத்திரமாக நிலவில் மென்மையாக தரையிறங்கியதே என்னுடைய முதல் பதற்றமான நிலை.
சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கியது என்பது இந்தியா மற்றும் இஸ்ரோவின் குவாண்டம் ஜம்ப் ஆகும். பிரதமர் நரேந்திர மோடி இதற்கு முக்கிய காரணம். விண்வெளி துறையை வெளிப்படையாக திறந்து விட்டதே அவர்தான். ஸ்ரீஹரிகோட்டாவின் கதவுகள் 2019 ஆம் ஆண்டில் இருந்து அடைக்கப்பட்டு இருந்தன.
விண்வெளி திட்டத்துக்கான நிதி பங்களிப்பும் அதிகரித்து இருக்கிறது. பத்திரிகையாளர்களும் பள்ளி மாணவர்களும் இம்முறை உள்ளே அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். அதற்கு மக்கள் தற்போது உரிமை கொண்டாடுகிறார்கள். " என்றார்.












Click it and Unblock the Notifications