மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..? வடகிழக்கு மாநில முதல்வர்களுடன்.. பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை
டெல்லி: கொரோனா பரவல் தொடர்பாக வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
நாட்டில் கொரோனா 2ஆம் அலை மெல்லக் குறைந்து வருகிறது. கடந்த மே மாதத்தில் நான்கு லட்சம் வரைகூட சென்ற வைரஸ் பாதிப்பு இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 37,154 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், நாட்டில் கொரோனா 2ஆம் அலை இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை என்றும் சில மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு இன்னும் அதிகமாகவே உள்ளதாக ஆய்வாளர்கள் பலரும் எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா பரவல் தொடர்பாக வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். வீடியோ கான்பரன்சிங் முறையில் நாளை காலை 11 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் அசாம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மிசோரம் ஆகிய எட்டு மாநில முதல்வர்கள் பங்கேற்கவுள்ளனர்.
மணிப்பூர், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் பல மாவட்டங்களின் பாசிட்டிவ் விகிதம் இன்னும்கூட அதிகமாகவே உள்ளது. கடந்த வாரம், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலையை ஆய்வு செய்திருந்தார்.
மேலும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள அருணாச்சல பிரதேசம், திரிபுரா, மணிப்பூர் உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்புக் குழுக்களையும் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications