Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதவன்முறையால் பற்றி எரிந்த நாக்பூரில் மோடி.. ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் தலைவர்களுக்கு மரியாதை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அவுரங்கசீப் கல்லறை விவகாரத்தில் மதமோதல்களால் பற்றி எரிந்த மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அதேபோல பாதுகாப்பு படையினருக்கு எதிராக தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறும் சத்தீஸ்கர் மாநிலத்தின் பல நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி இன்று பங்கேற்க இருக்கிறார்.

மகாராஷ்டிராவின் நாக்பூரில், பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.- ன் (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்) பிரதிபாத நிகழ்ச்சியில் அதன் நிறுவனத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து தீக்ஷாபூமிக்கு செல்லும் பிரதமர் மோடி, 1956-ம் ஆண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் புத்த மதத்தைத் தழுவிய அண்ணல் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்துகிறார்.

Modi Maharashtra Chhattisgarh

கோல்வால்கர் நினைவு மருத்துவமனையில்..

இதனைத் தொடர்ந்து மாதவ் நேத்ராலயா கண் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். 2014-ல் நிறுவப்பட்ட இந்த மையம் நாக்பூரில் அமைந்துள்ள முதன்மையான நவீன கண் சிகிச்சை மையமாகும். இந்த மையம் ஸ்ரீ மாதவ்ராவ் சதாசிவராவ் கோல்வால்கர் நினைவாக நிறுவப்பட்டது. இந்த விரிவாக்கத் திட்டத்தில் 250 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை, 14 புறநோயாளிகள் பிரிவு, 14 நவீன அறுவை சிகிச்சை மையங்கள் உள்ளிட்டவை இடம் பெறும். இந்த மையம் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த செலவில் உலகத் தரம் வாய்ந்த கண் சிகிச்சை தொடர்பான மருத்துவ சேவைகளை வழங்கும்.

விண்வெளி நிறுவனத்தில்..

நாக்பூரில் உள்ள சூரியசக்தி பாதுகாப்பு, விண்வெளி நிறுவனத்தின் வெடிமருந்து தொழிற்சாலையையும் பிரதமர் மோடி பார்வையிடுவார். விமானங்கள் தரையிறங்க ஏதுவாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள 1250 மீட்டர் நீளமும் 25 மீட்டர் அகலமும் கொண்ட விமான ஓடுதளப் பாதையையும் அவர் தொடங்கி வைக்கிறார். பின்னர் வெடிமருந்துகளை சோதனை செய்வது உள்ளிட்ட தளவாட சோதனை செய்வதற்கான வசதியையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

சத்தீஸ்கரில் பிரதமர் மோடி

உள்கட்டமைப்பு மேம்பாடு, நீடித்த வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, பிலாஸ்பூரில் மின்சாரம், எண்ணெய், எரிவாயு, ரயில், சாலை, கல்வி, வீட்டுவசதி போன்ற பல்வேறு துறைகளின் மேம்பாட்டிற்காக ரூ.33,700 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

பிலாஸ்பூர் தேசிய அனல் மின் நிலையத்தில்..

குறைந்த செலவிலான மின்சார விநியோகம், மின் உற்பத்தியில் தன்னிறைவு, ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பிலாஸ்பூர் மாவட்டத்தில் ரூ.9,790 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான தேசிய அனல் மின் நிலையத்தில் சிபட் சூப்பர் அனல் மின் திட்டம் அலகு-3 (1×800 மெகாவாட்) திட்டத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். உயர் மின் உற்பத்தித் திறன் கொண்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் மின்சார தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ரூ.15,800 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான முதலாவது நவீன அனல் மின் திட்டத்தின் (2X660 மெகாவாட்) பணிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார். மேற்கு மண்டல விரிவாக்கத் திட்டத்தின் கீழ் ரூ.560 கோடி மதிப்பிலான பவர்கிரிட் நிறுவனத்தின் மூன்று மின் பகிர்மான திட்டங்களையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

எரிவாயு விநியோக திட்டம்

கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான இலக்குகளை எட்டும் வகையில், காற்று மாசுவடைவதைக் குறைத்தல் தூய்மை எரிசக்திக்கான தீர்வுகளை வழங்குதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கொரியா, சூரஜ்பூர், பல்ராம்பூர், சுர்குஜா மாவட்டங்களில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் நகர எரிவாயு விநியோக திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இதில் 200 கி.மீ உயர் அழுத்த குழாய் மற்றும் 800 கி.மீ நடுத்தர அடர்த்திக் கொண்ட பாலிஎதிலீன் குழாய் மற்றும் ரூ.1,285 கோடி மதிப்பிலான பல்வேறு இயற்கை எரிவாயு விநியோக விற்பனை நிலையங்கள் ஆகியவையும் இதில் அடங்கும். ரூ.2,210 கோடி மதிப்பிலான இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் 540 கிலோமீட்டர் நீளமுள்ள விசாக்-ராய்ப்பூர் குழாய் அமைக்கும் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் குழாய்கள் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருள்களை ஆண்டுதோறும் 3 மில்லியன் மெட்ரிக் டன்னுக்கும் கூடுதலாக அளவிற்கு கொண்டு செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.

ரயில்வே திட்ட பணிகளுக்கு அடிக்கல்

இந்தப் பிராந்தியத்தில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில், மொத்தம் 108 கிலோமீட்டர் நீளமுள்ள ஏழு ரயில்வே திட்டப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மொத்தம் 111 கிலோமீட்டர் நீளமுள்ள ரூ.2,690 கோடி மதிப்பிலான மூன்று ரயில்வே திட்டங்களையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மந்திர் ஹசவுத் வழியாக அபன்பூர் - ராய்ப்பூர் பிரிவில் புறநகர் ரயில் சேவையையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். சத்தீஸ்கரில் ரயில் கட்டமைப்பு வசதிகளை 100% மின்மயமாக்கும் திட்டத்தையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். இத்தகையத் திட்டங்கள் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், போக்குவரத்து இணைப்பையும் மேம்படுத்தும். இதன் மூலம் சத்தீஷ்கர் மாநிலத்தில் சமூகப் பொருளாதார வளர்ச்சி மேம்படும்.

சாலைகள் அர்ப்பணிப்பு

இந்தப் பிராந்தியத்தில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், தேசிய நெடுஞ்சாலை எண் 930-ல் (37 கிலோமீட்டர்) மேம்படுத்தப்பட்ட ஜல்மாலா - ஷெர்பார் வரையிலான பிரிவையும், தேசிய நெடுஞ்சாலை 43-ல் அம்பிகாபூர் - பதல்கான் பிரிவு (75 கிலோமீட்டர்) வரையில் அமைக்கப்பட்டுள்ள இருவழிப் பாதையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தேசிய நெடுஞ்சாலை எண் 130-ல் கொண்டகான் - நாராயண்பூர் பிரிவில் (47.5 கிலோமீட்டர்) உள்ள பாதையை இருவழிப்பாதையாக மேம்படுத்தும் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ரூ.1,270 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கும் தொழில்துறை முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும்.

130 பிஎம் ஸ்ரீ பள்ளிகள் தொடக்கம்

அனைவருக்கும் கல்வியை உறுதி செய்யும் வகையில் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப அம்மாநிலத்தில் உள்ள 29 மாவட்டங்களில் 130 பிஎம் ஸ்ரீ பள்ளிகள் மற்றும் ராய்ப்பூரில் முழுமையான கல்வி மையம் அமைப்பது ஆகிய இரண்டு முதன்மை கல்வித் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ், பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் ஸ்மார்ட் போர்டுகள், நவீன ஆய்வகங்கள் மற்றும் நூலகங்கள் மூலம் உயர்தர கல்வியை வழங்க வகை செய்கிறது. ராய்ப்பூரில் கல்வி தொடர்பான பல்வேறு அரசுத் திட்டங்களை இணையதளம் மூலம் கண்காணிக்கவும், தரவுகளை பகுப்பாய்வு செய்யவும் இத்திட்டம் உதவிடும்.

3 லட்சம் பயனாளிகளுக்கு வீடுகள்

கிராமப்புற குடும்பங்களுக்கு முறையான வீட்டுவசதி கிடைப்பதை உறுதி செய்வதற்கும், அவர்களின் சுகாதாரம், பாதுகாப்பு, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலும் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 3 லட்சம் பயனாளிகளுக்கு வீடுகளை பிரதமர் மோடி வழங்குகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+